அதிமுகவின் கொங்கு கோட்டையை உடைத்துவிட்டது திமுக ! மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 9:19 AM IST
Highlights


கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினர் கூறி வந்த நிலையில் அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடைத்துவிட்டது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  பொள்ளாச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பாக நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். எம்.பி.க்கள் பொள்ளாச்சி சண்முகசுந்தரம், ஈரோடு கணேசமூர்த்தி, கரூர் ஜோதிமணி ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தேர்தல் நடந்த சமயத்தில் வாக்கு கேட்பதற்காக உங்களைத் தேடி ஓடோடி வந்தேன். அதுபோல நன்றி கூறுவதற்காகவும் ஓடோடி வந்துள்ளேன். திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்குச் சேர்த்து குரல் கொடுத்து ஏன் திமுகவுக்கு நான் வாக்களிக்கவில்லை என்று எண்ணக் கூடிய வகையில் திமுக எம்.பி.க்கள் செயல்பட உள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். ஆனால், அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் மக்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர்,

இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால் அதிமுகதான் வெற்றிபெற்றுள்ளது என்று சிலர் கூறுகிறார்கள். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. 

ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் 13 பெரிதா அல்லது 9 பெரிதா? அதிமுகவிடமிருந்த 12 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது என்றால் இதில் யாருக்கு வெற்றி” எனக் கேள்வி எழுப்பினார்.

இப்போது வேண்டுமானால் ஆட்சியமைக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், விரைவில் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சிக்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என உறுதி அளித்தார்.
 

click me!