சின்னமம்மிக்காக போயஸ் கார்டனில் வீடு… 30 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட பங்களா கட்டும் சீப்ராஸ் நிறுவனம்!

By sathish kFirst Published Apr 27, 2019, 7:36 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே சின்னமம்மி பற்றிய பேச்சு மீடியாக்களில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுக தரப்பில் சின்னமம்மியை ஜாமீனில் எடுத்து மீண்டும் பொதுச்செயலாளராக பதவி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

கடந்த சில நாட்களாகவே சின்னமம்மி பற்றிய பேச்சு மீடியாக்களில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுக தரப்பில் சின்னமம்மியை ஜாமீனில் எடுத்து மீண்டும் பொதுச்செயலாளராக பதவி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

சசியின் அக்காள் மகனான, தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரப்பன அக்ராஹாராவில் சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை பார்த்ததும், சின்னமம்மி எப்போது வெளியே வருவார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன்,  எவ்வளவு சீக்கிரம் என்று தெரியல. ஆனா கோர்ட் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்.

கடந்த 2017 பிப்ரவரி ௧மாதம், ஜெ சமாதியில் ஓங்கி படார் படார் என அடித்து சபதம் செய்துவிட்டு சிறைக்குச் போன சசி, போனதுதான், போய் 2 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். ஏற்கனவே  அம்மாவோடு அவர் சிறையில் இருந்த மாதங்கள், இப்போதைய 2 வருடத்துக்கும் மேற்பட்ட சிறைக்காலம் , சிறையில் அவரது நடத்தை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு சின்னமம்மி இன்னும் எவ்வளவு காலம் சிறையில் இருப்பது என்பது முடிவாகும். இந்த விஷயங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் சின்னமம்மி வெளியே வந்ததும் எங்கே தங்குவது என்பது பற்றி குடும்பத்தில் டீப் டிஸ்கஷன் நடந்திருக்கிறது.

மீண்டும் அம்மாவின் வேதா இல்லத்தில் சின்னமம்மி தங்குவதை அவரது அண்ணி இளவரசி உள்ளிட்ட யாரும் விரும்பவில்லை. சின்னமம்மியும் கூட அதை விரும்பலயாம். செண்டிமெண்ட்டாக மீண்டும் அந்த வீட்டுக்குச் செல்ல விரும்பாதது ஒரு காரணம் என்றால், இன்னொரு பக்கம் நினைவு இல்லமாக்குகிறேன் என்று அரசாங்கமும் தங்களுக்குச் சொந்தமானது என்று அம்மாவின் அண்ணன் பசங்களான தீபா, தீபக்கும் கூறிவருவதால் வேதா இல்லத்துக்கு மீண்டும் சின்னமம்மி செல்வதற்கு வாய்ப்பும் இல்ல. 

இந்த நிலையில்தான், போயஸ்  கார்டனிலேயே சின்னமம்மிக்கு புதிய அட்ரஸ் உருவாக்க கடந்த சில சிறை சந்திப்புகளில் பேசினார்களாம், இந்த சமயத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சின்னமம்மியை சந்தித்த தினகரன் இதுகுறித்து பேசினாராம்.

அதன்படிதான் போயஸ் கார்டனிலேயே சின்னமம்மிக்கு என புதிய பிரமாண்ட பங்களா ஒன்றைக் கட்டும் திட்டம் உருவாகியிருக்கிறது. இப்போது இருக்கும் அம்மா  வீட்டுக்கு எதிரே அம்மாவின் பாதுகாப்பு பணியாளர்கள், ஊழியர்கள் தங்குவதற்காக ஷெட் போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் பெரிய மரம் ஒன்று இருக்கும். அதைச் சுற்றி காலியிடம்தான். அம்மா பல ஆண்டுகளுக்கு முன் ஏலத்தில் எடுத்த அந்த இடம் 13 கிரவுண்டு அளவு கொண்டது. சின்னமம்மியின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு கம்பெனி பேரில்தான் அந்த இடம் இருக்கிறது.

அந்த இடத்தில்தான் ஒரு பங்களா கட்டுவது என்றும் சின்னமம்மி சிறையில் இருந்து வெளியே வரும்போது அங்கேயே தங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாவுக்கு எப்படி போயஸ்கார்டன் அடையாளமாக இருந்ததோ அதேபோல சின்னமம்மிக்கும் போயஸ் கார்டனே அடையாளமாக இருக்க வேண்டும் என்ற முடிவில் அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. இதற்கான பணி சீப்ராஸ் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரமாண்ட பங்களா கட்டப்பட்டு முடியவும், சின்னமம்மி சிறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்கும் என்று சொல்கிறார்கள் அமமுக வட்டாரத்தில். அந்த இடத்திலேயே கட்சியின் அலுவலகத்தையும் வைத்துக் கொள்ளலாமா என்பதெல்லாம் அப்புறமாக முடிவு செய்யப்படும் என்கிறார்கள் அவர்கள். ஆக போயஸ் கார்டனில் சின்னமம்மிக்காக பிரமாண்ட பங்களா தயாராகிறது.

click me!