தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேச வேண்டும் எனவும், அதிமுக ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதே மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் எனவும் பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. எடப்பாடிக்கும் டிடிவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டபோது பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 8 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்கொடி தூக்க ஆரம்பித்தனர். அதிலிருந்து எடப்பாடிக்கு தலைவலி ஆரம்பித்தது. எடப்பாடி அணியை சேர்ந்த வைத்தியலிங்கத்தின் அறிவிப்புக்கு பிறகு அதிமுக பதவியில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து நிர்வாகிகளை நீக்கி வருகிறார் டிடிவி. இதனிடையே டிடிவி தினகரனுடன் மோதலில் இருந்த திவாகரன் திடீரென ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்தார். அதனைதொடர்ந்து கட்சியை மீட்க வேண்டும் என்ற டிடிவியின் நம்பிக்கை மேலும் கூடியுள்ளது என்றே சொல்லலாம். எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டது என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்து பேட்டியளித்தனர். மேலும் தற்போது, புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்களும் தங்கியுள்ளனர். இதனால் ஆட்சி களைந்து விடுமோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேச வேண்டும் எனவும், அதிமுக ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதே மக்கள் & தொண்டர்களின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.