
சென்னை இப்படி ’ஜல’தோஷத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் சேலத்தில் அமர்ந்து கொண்டு முதல்வர் சொன்ன நேர்மறை வார்த்தைகளை எதிர்கட்சியினரும், இணைய குறும்பர்களும் எதிர்மறையாக்கி இம்சிக்க துவங்கியிருக்கின்றனர்.
அது என்ன விவகாரம் தெரியுமா?...
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அப்போது பேசிய முதல்வர் “ஏரி, குளம், ஓடைகள் ஓரளவு நிரம்பியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சியால் குடிநீர் பிரச்னை சவாலாக இருந்தது. 140 ஆண்டு இல்லாத வறட்சியை எதிர்கொண்டோம்.” என்றவர், “வடகிழக்கு பருவ மழை ஓரளவாவது பெய்தால்தான் விவசாய பணிகளை தொடர முடியும், நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும்.” என்று நிறுத்தினார்.
முதல்வர் வெகு யதார்த்தமாகவும், நேர்மறை எண்ணத்துடன் தான் இதை பேசினார்.
ஆனால் இந்த கடைசி வரியைத்தான் எடுத்து வைத்துக் கொண்டு ஆடுகின்றனர் இணையத்தில். “பருவமழை பெஞ்சாதான் விவசாயம் செழிக்குமுன்னு எங்களுக்கு தெரியாதா முதல்வரே! ஆனா மழை பெய்ஞ்சு வெள்ளம் வருமே அதை தடுக்க நடவடிக்கையை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தி வெச்சிருக்கணுமேங்கிற எண்ணம் உங்களுக்கு கிடையாதா?
மின்சார வொயர் அறுந்து ரெண்டு பிஞ்சுங்க இன்னைக்கு வெந்து போச்சே இதையும் பருவமழை கணக்குல எழுதிக்கலாமா? தாம்பரம் சானடோரியத்துல டி.பி. வார்டு ஜலசமாதியாகியிருக்குதே அதுவும் இதே கணக்கா? தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை தலை வரைக்கும் மூழ்கி போயிருக்கே, இதுவும் வடகிழக்கு கணக்கா!?
பருவ மழை விபரமெல்லாம் எங்களுக்கும் தெரியும், நீங்க மக்கள் பாதுகாப்ப உறுதிப்படுத்துங்க சாமி!” என்று வம்பிழுத்துள்ளனர்.
டெங்கு அடங்குனாலும் அடங்கும் இவங்க பொங்குறது மட்டும் அடங்கவே அடங்காது போல!