அண்ட புளுகு ஆகாச புளுகு... அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமனல் வழக்கு.. நாராயணசாமி எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 4:27 PM IST
Highlights

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- புதுச்சேரியில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அப்போதைய துணை நிலை ஆளுனர் கிரண்பேடியுடன் சுமூகமான நிலை இருந்தது. அதன் பிறகு நிர்வாகத்தில் தலையிட தொடங்கினார். கோப்புகளை தாமதப்படுத்துவது, நிராகரிப்பது, வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடுவது, தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவு போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டார்.

மேற்படி தலைமையிலான மத்திய அரசு எங்கள் அரசை முடக்குவதற்காக ஆளுநரை தூண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து ‘கிரண்பேடியே திரும்பி போங்கள்’ என்று போராடினோம். அதன் காரணமாக மாற்றப்பட்டார். இப்போது தமிழிசை ஆளுநர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆட்சி கவிழ்ப்பு மும்முரமாக நடந்தது. அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவினரை சந்தித்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருந்தும் பாஜக தலைவர்கள் வந்து முகாமிட்டனர். பெங்களூரில் இருந்து பணமூட்டைகள் கொண்டு வரப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டனர். எனக்கு அடுத்த அமைச்சராக இருந்த நமச்சிவாயம் ஒரு வருடமாக பாஜகவுடன் தொடர்பில் இருந்தார். அதேபோல் தீபாய்ந்தான் எம்.எல்.ஏ.வும் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

அவர்கள் மீதான வருமான வரி வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவாதம் கொடுத்தும், சிலரை மிரட்டியும், ஒரு சிலருக்கு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்கினார்கள். அப்படி இருந்தும் எங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், நியமன உறுப்பினர்கள் 3 பேருக்கும் ஓட்டுரிமை இருப்பதாக கூறி கவிழ்த்தார்கள். 

நேற்று காரைக்காலுக்கு வந்த அமித்ஷா, மோடியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வந்ததாகவும், ஒரு பகுதியை நான் எடுத்துக் கொண்டு மீதியை காந்தி குடும்பத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமித்ஷா மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடருவேன் என நாராயணசாமி கூறியுள்ளார். 

click me!