மத வன்முறையை தூண்டுகிறார்கள்... ஹெச். ராஜா உள்ளிட்டவர்கள் மீது முதல்வர் ஈபிஎஸிடம் சிபிஎம் முறையீடு..!

By Asianet TamilFirst Published Sep 4, 2020, 8:35 AM IST
Highlights

மத வன்முறையைத் தூண்டும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடித்தத்தில், “கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்கிற நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தனி நபர் விரோதங்களால் நடந்திருக்கிறது என்று மாவட்ட காவல்துறை உரிய முறையில், உரிய நேரத்தில் சரியாகவே தலையிட்டு விளக்கமளித்திருக்கிறது. ஆனால், காவல்துறை விசாரணைக்கும், விளக்கத்திற்கும் முன்பாகவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கொலை மதக் காரணங்களுக்காக நடந்ததாக பதிவு செய்திருந்தார்

.
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக மேற்கண்ட அருண் பிரகாஷ் கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்துள்ளனர். இதை வானதி சீனிவாசன் போன்ற அக்கட்சியின் தலைவர்களும் ஆமோதித்து பதிவு செய்திருக்கிறார்கள். இந்தக் கொலை பயங்கரவாதிகளின் செயல் என்று எழுதியுள்ளனர். இதையொட்டி #JusticeForArunPrakash என்ற ட்விட்டர் பிரச்சாரமும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என நாடு முழுவதும் டுவிட்டர் டிரெண்டிங் செய்திருக்கின்றனர்.
காவல்துறை காலதாமதமின்றி செயல்பட்டு, இந்தக் கொலை சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தது என விளக்கமளித்த பிறகும் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்களும் அதிகாரப்பூர்வ பாஜக ட்விட்டர் கணக்கிலும் தவறான நோக்கம் கொண்ட தங்கள் பதிவுகளை நீக்கவில்லை. பிரச்சாரம் தொடர்ந்து நடக்க வழி ஏற்படுத்தியுள்ளனர். இதேபோன்று, ஜூன் 22, 2017 அன்று பாஜகவின் ராமநாதபுரம் நிர்வாகி அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை தாக்கப்பட்டபோது எச்.ராஜா வெளியிட்ட பத்திரிக்கை செய்தி மற்றும் ட்விட்டர் பதிவில் ‘அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை முஸ்லிம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என கூறியிருந்தார்.
அக்கட்சியின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் ‘அஸ்வின் குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டப்பட்டுள்ளார்கள்’ என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியான நாராயணன் ‘தமிழக காவல்துறை தாலிபான்கள் அதிகம் உள்ள ராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால், ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேறோடு அறுக்கும்’ என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட முன்விரோதத்தின் காரணமாக நடைபெற்ற ஒன்று என்பது காவல்துறை விசாரணையில் பின்னர் வெளிவந்தது.
இதேபோன்று, இந்தாண்டு ஜனவரி மாதம் திருச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டபோது, “இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது” என்று வன்மம் கக்கியிருந்தார் எச்.ராஜா. அந்தக் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முரளிதரராவ் “Trichy plakkarai BJ Mandal Secretary Redu assinated by Jihadi goons in Tamilnadu” என்று மாநில நிர்வாகிகளை மிஞ்சி வன்மமும் வெறுப்பும் கலவர நோக்கமும் கொப்பளிக்க ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதேபோன்று திருப்பூரில் முத்து என்கிற மாரிமுத்துவின் தற்கொலை சம்பவத்திலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாஜகவினர் தனிப்பட்ட விரோதித்தினால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் பலவற்றிலும் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ‘இந்து - முஸ்லிம்’ மோதலை உருவாக்குவதற்காக அவதூறுகளை தொடர்ச்சியாக பரப்பி வருகின்றனர்.


இவ்வாறு பாஜக நிர்வாகிகள் அறிக்கைகள் விடுவதும், சமூக ஊடகங்களில் பேசுவதும் திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகின்றன. இவ்வாறு நடந்துகொள்ளும் பாஜகவினர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நியாயமற்றது. ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அவர்களது நோக்கத்திற்கு துணை செய்வதாக அமைந்துள்ளது. மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தேடித்தேடி கட்சியில் சேர்ப்பதும் குற்றச் செயல் கூட்டாளிகளால் படுகொலை செய்யப்படும்போது மதமோதலுக்கு பயன்படுத்தும் முறையில் வெறுப்பைக் கக்குவதும், வன்முறையைத் தூண்டுவதும் இவர்களின் இயல்பாகவே இருக்கிறது. தமிழகத்தை மதமோதல்களால் ரத்தக்களறி ஆக்கி அதில் அரசியல் லாபம் தேடுவதே இவர்களின் திட்டமாகும்.
எனவே, தமிழக முதல்வர், நேரடியாக இந்தப் பிரச்சனைகளில் தலையீடு செய்து அரசியல் லாபத்திற்காக மத மோதலை திட்டமிட்டு தூண்டுகிற பாஜக நிர்வாகிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.” என்று கடித்தத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

click me!