வைகோவை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட கே.எஸ்.அழகிரி..! அரசியலில் அதிரடி திருப்பம்..!

By Asianet TamilFirst Published Aug 8, 2019, 2:43 PM IST
Highlights

மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கும் மதிமுகவின் பிரதிநிதி வைகோ காங்கிரசை பற்றி விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ? வைகோவுக்கு எதிரி பாஜகவா ?காங்கிரஸா ? காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸையே விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வைகோ அரசியல் நாகரீகம் அற்றவர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

அதில், "காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 - ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் முன்னறிவிப்பு இன்றி உள்துறை அமைச்சர் தாக்கல் செய்வதார். அதை காங்கிரஸ் ,திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் ஒரே உறுப்பினரை மட்டும் கொண்ட மதிமுகவின் சார்பாக வைகோ பேசுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டதால்  வைகோவின் பேச்சை கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவரை அனுமதியுங்கள் என்று பரிந்துரை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன்னை அண்ணாவின் வழியில் வந்ததாக கோரிக் கொள்கிற வைகோ கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பாஜகவை கடுமையாக எதிர்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக கருதப்படுகிறது. நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ கருத்துக்களை வெளிப்படுத்துவதை விட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும் பக்குவத்தையும் இழந்து இருப்பதை காணமுடிகிறது. 

ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. தெருமுனையில் மேடை போட்டு மைக் பிடித்து ஆவேசமாக கத்துவது போல நாடாளுமன்றத்தில் கத்தி பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும்.. சாபம் தருவது போலவும்.. பேசுகிறார். அவர் பேசியபோது, பிரதமர் மோடியே  கைதட்டி ரசித்தாராம்.. வைகோ எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் வைகோ எடுத்துக்கொண்ட நேரத்தில் பெரும்பகுதிகள் அவர் காங்கிரசை தாக்கி பேசுவதில் கவனமாக இருந்தார். என்னை பேச விடுங்கள் நான் காங்கிரசை தாக்கி பேச வேண்டும் என்று அவர் அனுமதி கேட்ட விதமும் அதை ஆமோதித்து அனுமதி வழங்க பரிந்துரை செய்தது மாநிலங்களவையில் நடந்திருக்கிறது. 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்ரமணிய சுவாமியை சந்திக்கிறார் மோடியை சந்திக்கிறார்.. பாஜகவின் தலைவர்களை சந்திக்கிறார்.. அவர் பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். இதன் மூலம் வைகோ அரசியல் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வைகோவின் அரசியல் பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்வார்கள். 18 ஆண்டு காலம் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த திமுகவுக்கு பச்சை துரோகம் செய்தவர். 

கலைஞருக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ பலமுறை அவரது முதுகில் குத்தி இருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக் கொண்ட கலைஞர் அவர்களின் பெருந்தன்மை எங்கே..? வைகோவின் சிறுமைத்தனம் எங்கே? கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வை எதிர்த்து திமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்த போது அதற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர்  வைகோ. இதற்காகவே மக்கள் நல கூட்டணியை உருவாக்கியவர் வைகோ. இதற்கு காரணம் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது; தளபதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.

காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என்கிறார். இதை தான் பாஜகவும் சொல்கிறது. தத்துவ இயலில் ஒரு வாதம் உண்டு. தீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் வெவ்வேறாக காட்சி அளிப்பார்கள். ஆனால் ஒரே விதமாக பேசுவார்கள். அதைத்தான் மோடியும் வைகோவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.நேருவின் மிக உறுதியான லட்சிய நோக்கினாலும் நடவடிக்கையினால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

 

இல்லை எனில் ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்து இருக்கும். ஒரு வார கால நடவடிக்கையின் மூலம் உலகின் மிக அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேரு பெருமகனாருக்கு உண்டு. இதை துரோகம் என்று வைகோ சொல்கிறாரா? காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் வைகோ என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம். பாம்பும் கீரியும் சண்டை போடுவதாக சொல்லும் மோடி மஸ்தான் கடைசி வரை அந்த சண்டையை நடத்தவே மாட்டான். 

அதுபோல துரோகம் துரோகம் என்று சொல்லும் வைகோ.. துரோகம் எது என்று சொல்லாமல் தவிர்க்கக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும், அது அவருக்கு புரியவில்லை என்றால் அதை புரியவைக்கும் ஆற்றல் தமிழக காங்கிரசுக்கு உண்டு. அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குகிற வைகோ காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சி பாஜகவின் சதித்திட்டத்திற்கு துணை போகலாமா ? இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்து விட முடியும்? 

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் மதிமுக இருக்கிறது. மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கும் மதிமுகவின் பிரதிநிதி வைகோ காங்கிரசை பற்றி விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ? வைகோவுக்கு எதிரி பாஜகவா ?காங்கிரஸா ? காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸையே விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் தொடருமேயானால் கடுமையான ஏவுகணைகளை காங்கிரஸ் கட்சியில் இருந்து வைகோ மீது ஏவிவிடப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!