காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..! திருமண வீட்டில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Nov 18, 2019, 9:53 AM IST
Highlights

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய வாலிபரல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மைசூரில் இருக்கும் நரசிம்மராஜ தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று இரவு மைசூரில் நடந்த திருமண விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தன்வீர் சேட் அழைக்கப்பட்டிருந்தார். அதில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் மைசூர் சென்றிருந்தார்.

அப்போது அங்கு எம்.எல்.ஏ வந்ததும் ஏராளமானோர் திரண்டனர். கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் எம்எல்ஏவை குத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபர் குத்தியதில் பலத்த காயமடைந்து தன்வீர் சேட் சரிந்து விழுந்தார். உடனடியாக திருமண வீட்டில் இருந்தவர்கள் கத்தியால் குத்தியவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். காயமடைந்த எம்.எல்.ஏ வை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எம்.எல்.ஏ வை தாக்கிய வாலிபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மைசூர் அருகே இருக்கும் உதயகிரியைச் சேர்ந்த பர்கான்(20) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது. பர்கான் அளித்த வாக்குமூலத்தில் எம்.எல்.ஏ தன்வீர் சேட் தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாகவும் பலமுறை அலைக்கழித்ததாகவும் கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைத்து எம்.எல்.ஏ வை தாக்கியதாக தெரிவித்திருக்கிறார். அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!