Complaint on Annamalai மாரிதாஸ் ஓவர்.. அடுத்த குறி அண்ணாமலைக்கு.. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.

By Ezhilarasan BabuFirst Published Dec 15, 2021, 1:06 PM IST
Highlights

கொண்டாடியதாக பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் தவறான கருத்தை அண்ணாமலை பதிவிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை திராவிடர் கழக துணை அமைப்புகள் கொண்டாடியதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப் பற்றி தவறான கருத்துகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இது ஒருபோதும் கருத்துச் சுதந்திரம் ஆகாது என்றும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். ஏற்கனவே இதே விவகாரத்தில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திராவிடர் கழகம் புகார் கொடுத்திருப்பது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜக கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறது. அதே நேரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட திராவிட இயக்கத்தையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இதேபோல் பாஜகவின் துணை அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் திராவிடர் கழகத்தை கடுமையாக  தாக்கியும், விமர்சித்தும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது அதில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த அறியும் விசாரணைக்கு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை கைப்பற்றி விமானப்படை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க விமான விபத்து குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்தபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்திய தேசத்தின் பாதுகாப்பு படை தலைமை தளபதி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது, ஆனால் திராவிட கழகத்தின் துணை அமைப்புகள் அதை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இது நாட்டிற்கு எதிரான மன நிலையை காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நாட்டுக்கு எதிராக  பேசுபவர்கள் மீது நாட்டில் எந்த மாநிலத்தில் எந்த காவல் நிலையத்திலும் எவர் ஒருவரும் புகார் கொடுக்கலாம், அப்படி புகார் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது அந்த குறிப்பிட்ட போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான வழிவகைகள் சட்டத்தில் உள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக போலீஸார் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்திருந்தார். 

அதேபோல் இந்த விவகாரத்தில் யூடியூபர் மாரிதாஸ் அவர்கள் தமிழகம் காஷ்மீரி போல் மாறுகிறதா? என்று சமூக வலைத்தளத்தில் கருத்து ஒரு பதிவிட்டிருந்தார். அதேபோல் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மற்றும் அது தொடர்பான விவதம் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு வரும் நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை திராவிடர் கழக துணை அமைப்புகள் கொண்டாடியதாக பொய்யான தகவல் பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணை தலைவர் கலி பூங்குன்றன், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் பலியாகினார். இந்த விபத்தை கண்டு திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகள் கொண்டாடியதாக பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் தவறான கருத்தை அண்ணாமலை பதிவிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் பொதுமக்களிடையே திராவிடர் கழகத்தை பற்றி தவறான கருத்தை பரப்புவதற்காக உள் நோக்கத்தோடு செயல்படுவது, கருத்து சுதந்திரம் கிடையாது என அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

click me!