கூட்டணி ஆட்சி... அமைச்சரவை கனவோடு யாரும் கிட்டே வரக்கூடாது... எகிறியடிக்கும் எடப்பாடியார்..!

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2020, 1:28 PM IST
Highlights

எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக் கொள்ளவேண்டும்

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளன. அதுபோலவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகள் அதிக சீட்டுகளுக்காக தலைமை தாங்கும் கட்சிகளை நச்சரிக்கவும் ஆரம்பித்துள்ளன. இந்த வகையில் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் பதவி என பல கட்சிகள் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தன. இதில் பாஜக ஒருபடி மேலேபோய் தினமும் ஆளுக்கொரு கோஷமிட்டு வந்தனர். இதனால், அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி வந்தது.

இந்த குழப்பங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது அதிமுகவின் தேர்தல் பிரச்சார ஒப்பனிங் கூட்டம். பெரும் திரளாகக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, ’’கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக் கொள்ளவேண்டும்’’என்றார். 

‘’இதை தனிப்பட்ட முனுசாமியின் கருத்தாகக் கருதக் கூடாது. முதல்வர் எடப்பாடியுடன் விவாதிக்காமல் அவர் இப்படி பேசியிருக்க முடியாது. யாருக்கும் அடிபணியும் ஆள் நான் இல்லை என்பதை முனுசாமி மூலம் முதல்வர் எடப்பாடி அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்’’என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ’’எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாம்தாம் வாரிசுகள். அதிமுகவில்தான் ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். இன்றைக்கு நான், நாளைக்கு அண்ணன் ஓபிஎஸ். அதற்கடுத்தபடியாக நீங்கள் கூட முதல்வராக முடியும்’’எனக்கூறினர். 

இதுபற்றி கருத்து தெரிவித்த அரசியல் நோக்கர்கள், ’’கடந்த சில நாட்களாக அதிமுக கூட்டணி பற்றி தவறான செய்திகள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வு ஏற்பட்டது உண்மைதான். இந்த பின்னணியில்தான் அதிரடி நிகழ்த்தியிருக்கிறது அதிமுக. கூட்டணி ஆட்சி பற்றிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது, தொண்டர்களுக்கு புது தெம்பை தந்திருக்கிறது. அத்துடன் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிற மெசேஜூம் தொண்டர்களுக்கு தரப்பட்டுள்ளது. மிகச் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகச் சரியான நடவடிக்கை அதிமுகவின் வெற்றிக்கு அச்சாரமாகவே அமைந்துள்ளது’’என்கின்றனர். 

click me!