இந்த சமயத்தில் ஈகோ பார்க்காதீங்க... மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2021, 1:44 PM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றை முழுவதுமாக வேரறுக்க காவல்துறையுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றாக செயல்பட்ட வேண்டுமென தெரிவித்தார். 

தமிழகத்தில் நாளை முதல் கட்டுப்பாடுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றை முழுவதுமாக வேரறுக்க காவல்துறையுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றாக செயல்பட்ட வேண்டுமென தெரிவித்தார். 


ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது: கொரோனா தொற்று மேலும் பரவால் தடுக்க ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் இருந்து பரவும் சங்கிலியை உடைக்க வேண்டும். அதனால் தான் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். மருத்துவ பிரச்சனை ஒருபக்கம், நிதி நெருக்கடி மறுபக்கம் எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டி இருக்கக்கூடாது. நம் அனைவரையும் விட கொரோனா பெரியது. அனைவரும் தடுப்பூசி செலுத்தக் கொள்ள வேண்டிய கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எனது முயற்சிகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் பால், தண்ணீர் விநியோகம் சீராக உள்ளதை உறுதி படுத்த வேண்டும். மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள போக்குவரத்தில் எவ்வித தடையும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். 
 

click me!