யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்புக் கட்டளை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2021, 11:14 AM IST
Highlights

கடுமையான  நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள நேரத்தில், கோவையில் பாதிப்புகள் அதிகரித்து வருவது திமுக அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் தற்போது சற்றே குறைந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் கோவை மாவட்டம் கொரோனா தொற்றில் முதலிடம் பிடித்துள்ளது. தினசரி பாதிப்புகள் மட்டும் 4 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி கோவை மாநகராட்சியில் தீவிரமாக  பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கிராமப்புறங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 

எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும், கொரோனா  பரிசோதனைக்கு வந்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்தும் படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். கடுமையான  நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள நேரத்தில், கோவையில் பாதிப்புகள் அதிகரித்து வருவது திமுக அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரில் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். 

இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்படுகிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்  உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுகவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால் திமுகவினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்.  உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில் ஒன்றிணைவோம் வா செயல்பாட்டின் அடிப்படையில் பசியினைப் போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!