எடப்பாடியாரின் ஹிட் ஸ்ட்ரோக்!: சாதி வாரி கணக்கெடுப்பும், முதல்வரின் செம்ம சாமர்த்திய அரசியல் மூவ்களும்!

By Selva KathirFirst Published Dec 2, 2020, 1:16 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடியாரும் தனது இந்த ஆட்சிக் காலத்தில் கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார். ஆனால் அவை ஒவ்வொன்றையும் அவர் மிக  சாதுர்யமாக கையாண்டு, வெற்றி பெறுகையில்தான் பிரமிக்க வைக்கிறார். 

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது தமிழக முதல்வர் எடப்பாடியாரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி ‘திறமையான நிர்வாகி’ என்றார். இதில் அ.தி.மு.க.வினரின் சந்தோஷத்தை விட பா.ஜ.க.வினரின் ஆச்சரியம்தான் பெரிதாய் பார்க்கப்பட்டது. 

காரணம்?

சர்வதேச நாடுகளும் பிரமிப்பாக பார்க்கும் பாரத பிரதமர் மோடியிடம் கூட ஒரு பாராட்டைப் பெற்றுவிடலாம். ஆனால் அமித்ஷாவிடம் ஒரு புன்னகையைப் பெறுவதென்பதே மிக மிக கடினமான நிலையில் இப்படியொரு உற்சாகப்படுத்தலை தமிழக பா.ஜ.க.வினரே எதிர்பார்க்கவில்லை. அப்போது அவர்களின் முன்  எடப்பாடியாரின் இமேஜ் விஸ்வரூபமெடுத்தது. 

ஆனால் அது ஸ்டாலின் சொன்னது போல் ‘கூட்டணி சம்பிரதாயத்துக்கான பாராட்டு’ அல்ல என்பதை நெத்தியடியாக நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடியார். ஒரு தலைவன் தனது திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் பெரும் சவாலான கால கட்டத்தை தான் பொறுப்பில் இருக்கும்போது சந்திக்க வேண்டும். நெருப்பில் மூழ்கி வரும் தங்கம்தான் ஈர்ப்பான டிஸைனாக வடிவம் பெற்று ஜொலிக்கிறது! என்பது போல், முதல்வர் எடப்பாடியாரும் தனது இந்த ஆட்சிக் காலத்தில் கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார். ஆனால் அவை ஒவ்வொன்றையும் அவர் மிக  சாதுர்யமாக கையாண்டு, வெற்றி பெறுகையில்தான் பிரமிக்க வைக்கிறார். 

உலகப் பேரிடர் நோயான கோவிட் 19ஐ கண்டு வல்லரசு நாடுகளே நடுங்கின. இந்தியாவில் அதிலும் நெருக்கடி மிகுந்த தமிழகத்தில் இந்த நோயின் தாக்கம் பேயாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் முதல்  இதோ இன்று வரை தமிழக முதல்வர் எடப்பாடியார் எடுத்து வைக்கும் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் அந்நோயை முடக்கியுள்ளன. அதேவேளையில் மாநில பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்காது அவர் காத்தது வட இந்திய பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதுமளவுக்கு பெயர் பெற்றது. 

கொரோனாவுக்கு ஒரு முடிவுரை எழுதும் முன்னே நிவர் புயல்! வந்தது. மிக சாமர்த்தியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து காத்தார். இதோ அடுத்து புரெவி புயல் குறித்தும் ‘பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்’ என்கிறார்  மக்களிடம். இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘சரி ஆட்சியே கையில் உள்ளது. ஆள், அம்பு, படையை வைத்து சமாளிப்பதில் என்ன பெருமை?’ என்கின்றனர். 

உடல் வலிமையை காட்டி  ஜெயிப்பது மட்டுமில்லை, சூழலுக்கு ஏற்க  அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்துவதிலும்  தன்னை மிக மிக அனுபவசாலி அரசியல் தலைவர்கள் வட்டத்தில் அவர் நிலை நிருத்தியிருப்பதுதான் ஹைலைட்டே. அதற்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டாக ’சாதி வாரி  கணக்கெடுப்பு ஆணையம்’ அறிவிப்பை சொல்லலாம். 

அதாவது இந்திய அரசியலும், சாதியும் பிரிக்க முடியாதவை. அதற்கு தமிழகம் விலக்கு அல்ல. வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று பெரும் போராட்டம் நடந்தது. அதில் ரகளையும் நடந்தது.  அ.தி.மு.க.வின் கூட்டணியில் பா.ம.க. இருந்த நிலையிலும் ரகளை செய்த பா.ம.க.வினரை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் முதல்வர்.  கூட்டணிக்காக மக்களை அவஸ்தைப்பட வைக்கவில்லை அவர். இது பெரும் பாராட்டைப் பெற்றது. 

அதேவேளையில் ‘உரிமைக்குப் போராடினால் கைது செய்வதா! போராட்டத்துக்கு அமைதியாக  வருவோரை வழிதடுப்பதா?’ என்று அரசிடம் பொங்கியது பா.ம.க. இதைப் பார்த்து ‘அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசல். எடப்பாடியாரிடம் எகிறுகிறது பா.ம.க.’ என்று வதந்தி பரப்பியது தி.மு.க. உடனே  முதல்வர் வழக்கமான புன்னகை ஒன்றை உதிர்த்துக் கொண்டே சட்டென்று அறிவித்தார் ‘சாதி வாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்படுகிறது!’ எனும் உத்தரவை. அதில் “தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பினை பெற்றுத்தந்த வீராங்கனைதான் அம்மா. அவர் வழியில் நடக்கும் அரசு இது. 

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பல காலகட்டங்களில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பல்வேறு பிரிவு மக்களுக்கு மிக சரியாக சென்றடைவது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு  இந்த சாதி வாரி கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் தேவை. 

எனவே இதை நிகழ்த்திட பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.” என்று தடாலடியாய் அறிவித்து எல்லோரது வாயையும் மூடியிருக்கிறார். எடப்பாடியாரின் இந்த மூவ்!வினை மிகப்பெரிய Hit மற்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, சாதி வாரியாக கணக்கெடுத்து, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒதுக்கீடுகள் முடிவு செய்யப்படும்! என்கிறார் முதல்வர். இதன் மூலம் தமிழகத்தில் வன்னியர் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்,  முக்குலத்தோரின் ஒவ்வொரு பிரிவும் எவ்வளவு பேர்! என்று தெளிவான புள்ளிவிபரத்தை உருவாக்கிட முடியும். இதன் மூலம் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மிக துல்லியமாகவும் வகுத்திட முடியும் என பிளான் பண்ணுகிறார் முதல்வர். இந்த ஆணையம் அமைக்கப்பட்டு, அது தன் வேலையை துவங்கி, தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வீடு வீடாக சென்று தகவல்களை திரட்டி, அதை  சாதி மற்றும் அதன் உட்பிரிவுகள் படி பிரித்து அட்டவணையிட்டு, அதன் பக்கா அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். 

ஆனாலும், இப்போது 20% கேட்டு துள்ளும் பா.ம.க.வை ’இதோ புள்ளி விபரம் வந்ததும் அதன் அடிப்படையில் முடிவு பண்ணிடுவோம். அப்போதானே மற்ற சாதிகள் உங்களுக்கான சலுகையை சொல்லி சீண்டது. வன்னியர் சமுதாய சதவீதத்தை தெம்பாக சொல்லி நீங்கள் உரிமையாக ஒதுக்கீடு வாங்கிட முடியும்! என சமாதானப்படுத்தியது போலவும் ஆச்சு, அதேபோல் பட்டியலின மக்களை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு எதிராக அம்மக்களிடம் ”உங்களின் எண்ணிக்கை மற்றும் பவரை துல்லியமாக பட்டியலிட்டு தருகிறோம்.  உங்களின் வலிமையை வெளிப்படையாக சொல்லி தி.மு.க.விடம் ‘சீண்டும் வேலை வேண்டாம்!’. தொடர்ந்தால் இந்த வாக்கு வங்கி மிக முழுமையாக உங்களைப் புறக்கணிக்கும்.” என சீறிட அவர்களை தூண்டியது போலவும் ஆச்சு! எப்படிப் பார்த்தாலும் இந்த ஆணையம் ஆணை தமிழக முதல்வரின் மிகப்பெரிய  அரசியல் சாணக்கியத்தன நடவடிக்கைதான். வெல்டன் எடப்பாடியாரே! என்கிறார்கள். 

click me!