காய்ச்சல் முகாம்களை இருமடங்காக உயர்த்துங்கள்... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 12, 2021, 6:52 PM IST
Highlights

சென்னை மாநகரத்தில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, 400 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கபசுர குடிநீர் விநியோகம், வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆகிய பணிகளில் சுகாதாரத்துறை, மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகரத்தில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, 400 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்ற பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதேபோல சென்னை மாநகரத்திலும், பிற மாநகரப் பகுதிகளிலும் நம்முடைய அரசால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களின் மூலமாக வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். 

இவற்றை தொடர்ந்து செயல்படுத்தினால்தான் கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும் அதோடு, பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பொது இடங்களில் மக்கள் கூடும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல, உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!