இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து சுற்றறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 28, 2021, 3:38 PM IST
Highlights

நேர்காணலில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரின் தர வரிசை கோயில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படுவதோடு, தரவரிசை அடிப்படையில் அறங்காவலர் குழுவினர் தீர்மானம் பெற்று தகுதியானவர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அனைத்து கோவில் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், முதுநிலை கோயிலின் நுழைவு நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள், முதுநிலை அல்லாத கோயில்களில் இல்லாத நேர்வுகளில் அத்தகைய பணியிடங்கள் பிற நியமன முறைப்படி அதாவது வெளியில் இருந்து நபர்களை கொண்டு நிரப்பப்படலாம் என்றும், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, ஊதியம் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,விண்ணப்பங்களை கோரும் அறிவிப்புக்கு ஏற்ப சமய நிறுவனத்தின் வலைதளங்கள் மற்றும் அறிவிப்பு பலகை, கோயில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி மன்றம், நகராட்சி, மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள கோயில்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் எனவும்,  விண்ணப்பங்களை பரிசீலித்தும், தகுதியின்மைகளை பரிசீலித்தும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டும் அனுப்பபட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை நிராகரித்து அதற்கான காரணத்தை அவர்களுக்கு தெரிவிப்பதோடு, நேர்முக தேர்வினை விதியில் தெரிவித்துள்ள படி நேர்காணல் குழு அமைத்து நேர்காணல் நடத்தப்பட வேண்டும் என்றும், 

நேர்காணலில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரின் தர வரிசை கோயில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படுவதோடு, தரவரிசை அடிப்படையில் அறங்காவலர் குழுவினர் தீர்மானம் பெற்று தகுதியானவர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும், நியமனம் தற்காலிகமானது என்றும் ஆணையரின் சீராய்வுக்கு உட்பட்டது எனவும் கண்டிப்பாக நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் நியமனம் குறித்து உரிய விவரங்களுடன் 15 தினங்களுக்குள் ஆணையருக்கு அறிக்கை அனுப்பபட வேண்டும் என்றும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

click me!