யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழகம் தலை சிறந்த மாநிலம்.!ஆளுநருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jun 8, 2023, 3:12 PM IST
Highlights

தமிழகத்தில் புதியதாக தொழில்கள் தொடங்கப்படுகின்றன என்றால் என்ன பொருள்? தமிழ்நாட்டில் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது என்று பொருள்!  தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது என்று பொருள்! அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தலைசிறந்த மாநிலமாக தமிழகம்

22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தலைநிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

அனைத்துத் தொழில்களிலும் சிறந்த மாநிலமாக விளங்கும் நம்முடைய தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம்! அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள் வளர்ந்து வரும். புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது.

கொலை நடக்காத நாட்களே இல்லை.!சர்வாதிகார ஆட்சியால் தமிழகம் தலை குனிந்து உள்ளது-திமுகவை விளாசிய ஆர்.பி. உதயகுமார்

உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு

விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறைகள், மின்னணு வடிவமைப்பு மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு அபரிவிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன. அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது.

2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன. தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சந்து 3 ஆயிரத்து 279 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என பெருமிதத்துடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

2021- 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது. நம்முடைய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக 2022-2023-ஆம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு அமைதி மாநிலம்

இப்படி புதிய புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், புதியதாக தொழில்கள் தொடங்கப்படுகின்றன என்றால் என்ன பொருள்? தமிழ்நாட்டில் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது என்று பொருள்! தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல் இளைய சக்தி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பொருள்! தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது என்று பொருள்! அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது.

இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம். மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்.! ஆளுநர் பதவிக்குள் பதுங்க கூடாது- முரசொலி

click me!