சீக்கிரம் முடிங்க... அதேநேரத்தில் அதிக கவனமா இருங்க... அமைச்சர் எ.வ.வேலுவிற்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 13, 2021, 10:53 AM IST
Highlights

"மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்"  என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சிவசண்முக ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார். 

நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், புதுப்பித்தல், பராமரித்தல், புறவழிச்சாலை மற்றும் சுற்றுச்சாலை அமைத்தல், புதிய பாலங்களைக் கட்டுதல், பழைய பாலங்களைச் சீரமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் கட்டுதல், இரயில்வே கடவுக்குப் பதிலாகச் சாலை மேம்பாலம் / கீழ்ப்பாலம் கட்டுதல், சாலை சந்திப்புகள் / குறுகிய வளைவுகளை மேம்படுத்துதல், சாலைப் பாதுகாப்புப் பணிகள், சாலையின் இருபுற ஓரங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட  முதலமைச்சர், வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் முறையாகத் திட்டமிட்டு, விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பணிகளின்போது இதர அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், ஒன்றிய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்ட சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் பணிகளான துறைமுகங்களை நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், சிறுதுறைமுகங்களில் சரக்குகளைக் கையாளுதல், பயணிகள் போக்குவரத்து, கன்னியாகுமரி படகுப் விவேகானந்தர் பாறையில் படகுத் தோணித்துறை நீட்டிப்பு குறித்தும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு நடத்தியுள்ளார். 

click me!