அணி திரட்டப்படும் அமைச்சர்கள்.. இறங்கி அடிக்க தயாராகும் இபிஎஸ்.. தீவிரமாகும் முதலமைச்சர் வேட்பாளர் போர்..!

By Selva KathirFirst Published Aug 18, 2020, 10:23 AM IST
Highlights

அதோடு மட்டும் அல்லாமல் ஓபிஎஸ் தனக்கு டெல்லியின் ஆதரவு உள்ளது என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். எனவே டெல்லியில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்கோர் செய்ய முடியும் என்றும் ஓபிஎஸ் நம்புகிறார். இந்த ஒரு விஷயம் தான் எடப்பாடிக்கும் இடையூறாக உள்ளதாக சொல்கிறார்கள். 

தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முஸ்தீபுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக்கி வருகிறார்.

3 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் எவ்வித சிக்கலுமின்றி நீடித்த தன்னால் முதலமைச்சர் வேட்பாளராகவும் களம் இறங்க முடியும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் தீர்க்கமான முடிவு என்கிறார்கள். டெல்லியையும் சமாளித்து தமிழகத்தில் கட்சிக்காரர்களையும் சமாளித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசை வழிநடத்தும் தன்னால் அதிமுகவையும் வழிநடத்த முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபிக்கும் முயற்சியில் முதலமைச்சர் களம் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர் ஆகியுள்ளனர். ஆனால் கைவிட்டும் எண்ணிக்கையில் கூட இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் முகாமுக்கு செல்லவில்லை. அதே சமயம் ஓபிஎஸ்சை சமாளித்து நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை களம் இறக்கியது. சட்டமன்ற தேர்தல் இடைத் தேர்தலில் முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களை நிறுத்தியது போன்றவற்றை முன்வைத்து தான் முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் இபிஎஸ் களம் இறங்கியுள்ளார்.

தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை முடிவு செய்து கொண்ட பிறகே தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலுடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலமே முதலமைச்சர் வேட்பாளர் என்பதை எடப்பாடி ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஓபிஎஸ் எனும் ஒருவர் எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டுவிட்டால் முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் தனக்கு தான் வெற்றி என்பதையும் எடப்பாடி பழனிசாமி புரிந்து வைத்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியும்.

அந்த வகையில் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணி வகுத்து நிற்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களிலும் கணிசமானவர்கள் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே பெரும்பான்மை என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அமைச்சர்களில் ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரும் தன் பக்கம் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதற்காக கடந்த சில நாட்களாக அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பேசி வருகிறார்.

முக்கிய அமைச்சர்கள் அனைவரும் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளனர். ஆனால் ஒரு சில அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதே போல் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட மாவட்ட மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் ஜாதி அரசியல் தடையாக உள்ளது. ஓபிஎஸ்சை மீறி எடப்பாடியை தேர்வு செய்தால் சொந்த ஊரில் செல்வாக்கை இழக்க நேரிடும் என்று அதிமுக முக்கிய பிரமுகர்கள் கருதுகின்றனர்.

அதோடு மட்டும் அல்லாமல் ஓபிஎஸ் தனக்கு டெல்லியின் ஆதரவு உள்ளது என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். எனவே டெல்லியில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்கோர் செய்ய முடியும் என்றும் ஓபிஎஸ் நம்புகிறார். இந்த ஒரு விஷயம் தான் எடப்பாடிக்கும் இடையூறாக உள்ளதாக சொல்கிறார்கள். டெல்லியில் இபிஎஸ் செல்வாக்குடன் இருந்தாலும் அவர் மீதான நம்பிக்கை ஓபிஎஸ் மீதுள்ள நம்பிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைவு தான் என்கிறார்கள். டெல்லி மேலிடத்தை மட்டும் தற்போதைக்கு எடப்பாடி சரிகட்டிவிட்டால் எவ்வித பிரச்சனையும் இன்றி எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் ஆகிவிட முடியும். இதற்காக எடப்பாடியின் வலது மற்றும் இடதுகரமாக உள்ள அமைச்சர்கள் 2 பேர் விரைவில் டெல்லி செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

click me!