பாஜக ஆட்சியில் விவசாய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை திருத்தியமைக்கப்படும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய சிதம்பரம், பத்தாண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது விதிகளை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும். சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்ன ஆனது? அந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது? என சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறையின் வளர்ச்சி 4.1% ஆக இருந்தது. ஆனால் 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயத்தின் வளர்ச்சி 2.1% ஆக குறைந்துவிட்டது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை திருத்தி அமைக்கப்படும் என ப.சிதம்பரம் உறுதியளித்தார்.