
சராசரியாக 75 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் சென்னை பெருமாநகரில் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் அசைவப் பிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கிச்சென்றனர். ஊரடங்கு காலத்தில் கறிக்கோழி கிலோ ஒன்றிற்கு ரூபாய் 110, 120 என இருந்து வந்தது. சென்னைக்கு வரும் கறிக்கோழியின் அளவு திடீரென 30 சதவிகிதம் குறைந்ததால், தேவை அதிகமாகி கறிக்கோழியின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 5 லட்சம் கிலோ விற்பனையாகும். ஆனால், நேற்று 3.5 லட்சம் கிலோ அளவே சென்னைக்கு கறிக்கோழி அனுப்பப்பட்டது. இந்த விலை உயர்வு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட உயர்வால் சங்கிலித் தொடர் பாதிப்பால் கோழிகளின் வரத்து குறைந்துள்ளதாகவும் அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்த விலையேற்றம் உயர்ந்துள்ளதாக கோழி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். முன்பு ரூ.120 க்கு விறபனை செய்யப்பட்ட 1 கிலோ கோழிக்கறி தற்போது ரூ.300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறிக்கோழி விலை ஏற்றம் காரணமாக அசைவப் பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கேரளாவிலும், கோழிக்கறியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இது இறைச்சி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற வகை உணவுகளை விட அசைவ உணவுகளை மக்கள் அதிகம் விரும்புவது வழக்கம். அதிலும் கோழிக்கறி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதை பல்வேறு வகைகளில் சமைத்து உணவகங்களில் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கோழி இறைச்சியின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூபாய் 86-லிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் அதை அதிகளவு வாங்கி சமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிக விலைக்கு விற்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் கோழி இறைச்சி உணவுகளை, உணவகங்களின் பட்டியலில் இருந்து நீக்க உணவக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.