சென்னை வாசிகளே உஷார்.. காலை 10 மணிக்கு மேல் வெளியில் போக இ-பாஸ் அவசியம்.. காவல் துறை எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 18, 2021, 10:54 AM IST
Highlights

பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும், இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டார் பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.  

கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த (18-5-2021) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் சரக எல்லைக்கு வெளியே செல்ல இப்பதிவு அவசியம். 

தமிழக அரசின் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவின்பேரில், (18-5-2021) முதல் முறையாக ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு காவல் நிலையங்களில், உரிய சாலை  தடுப்புகள் அமைத்து செக்சார்களை ஏற்படுத்தி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி உணவுப் பொருட்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைபடி, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மேற்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர். சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து, முக்கிய சந்திப்புகள் சரக எல்லைகள் என 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்ட காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ- பதிவு செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, உரிய சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, செக்டார்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை புறநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 

பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும், இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டார் பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள். சென்னை பெருநகரில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள 181 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்,  தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணித்தும், தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் 205 இருசக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், உரிய காவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலைய ரோந்து வாகனங்கள், குறிப்பிட்ட முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் இப்பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் பணியினை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையாளர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், களப்பணியாளர்கள் காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

click me!