அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டு 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் மிலானி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.