பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.25000 வரை அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பொது இடங்களில் குப்பையை போடுவது பலருக்கு வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற மாநகராட்சிகளில் குப்பைகளை எந்தவித குற்ற உணர்வுமின்றி பலர் சாலைகளிலும் பொது இடங்களிலும் வீசிவிடுகின்றனர்.
மாநகராட்சிகளில் பொது இடங்களில் போதிய குப்பை தொட்டிகள் இல்லை என்பதும் உண்மை. அதே வேளையில், அதற்காக குப்பைகளை பொது இடத்தில் போடுவது என்பது சுற்றுச்சூழலை சீரழிக்கும் செயல்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தூய்மை பணிகளும் அதுதொடர்பான விழிப்புணர்வுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் தூய்மையான சென்னையை உருவாக்க முடியும் என சென்னை மாநகராட்சி நம்புகிறது. அதன்படி, பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் குப்பை போட்டால், ரூ.25000, குடியிருப்பு வாசிகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.1000 அபாரதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு, குறு மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் பொது இடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதால் தான் அந்த நாடுகள் தூய்மையாக உள்ளன. சென்னை மாநகராட்சியின் அதிரடியான நடவடிக்கை எந்த அளவிற்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது? அதன்மூலம் சென்னை மாநகராட்சி தூய்மையாக பராமரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..