
காவிரி வழக்கில் 2 வார கால அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை கடந்த 9 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதையே ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். இது தொடர்பான வரைவு செயல் திட்டத்தை தயார்படுத்தி மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். செயல் திட்டத்தை உருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்டது மத்திய அரசுக்குத்தான் என்பதால், எந்த மாநிலத்துடனும் கலந்தாலோசிக்க தேவையில்லை. காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 3 ஆம் தேதிக்கு உத்தரவிட்டது.
மே 3 ஆம் தேதி நெருங்கிவிட்ட நிலையில், வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 2 வார காலம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
இந்த நிலையில், காவிரி வழக்கில் 2 வார காலம் அவகாசம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி மேலாண் வாரியம் அமைக்காமல் மத்திய அரசு மீண்டும் தாமதப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.