கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை வெளிப்படுத்திய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு...களத்தில் இறங்கிய எஸ்டிபிஐ..!

Published : Apr 22, 2021, 04:35 PM IST
கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை வெளிப்படுத்திய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு...களத்தில் இறங்கிய எஸ்டிபிஐ..!

சுருக்கம்

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.   

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக்கின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த சந்தேகங்களை தனது கருத்துரிமை மூலம் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் கரடுமுரடாக இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய சந்தேகங்கள் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான்.

இந்நிலையில், பாஜகவினர் உள்ளிட்ட சிலர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையை நசுக்கும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது.

நடிகர் விவேக் அவர்களை பொறுத்தவரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே ஊசி போட்டுக் கொண்டார். ஆனால், அதன் பிறகான அவரின் உடனடி மரணம் அவரின் விழிப்புணர்வுக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. அவரின் மரணம் தொடர்பாக அரசு தரப்பில் என்னதான் விளக்கம் கொடுத்தாலும்  பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்துக்கு உரிய முறையில் விடை கிடைக்கவில்லை.

நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை அதற்குரிய வகையில் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக தெரிவித்தவரை வழக்கு கைது என மிரட்டுவது ஏற்புடையதல்ல. இத்தகைய போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனி யாரும் தங்களது கருத்தை வெளிப்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுவிடும். 

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை கண்காணிக்கும் கமிட்டியான AEFI எனப்படும் Adverse Events Following Immunization தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நாட்களுக்குள் எந்த ஒரு மனிதருக்கும் ஏற்படும் உடல் உபாதைகள், உடலில் தோன்றும் மாற்றங்கள் அல்லது மரணங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிறது. இந்தியாவில் 30 நாட்கள் என்பது 14 நாட்களாக்கப்பட்டுள்ளது. அந்த 14 நாட்களில் தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகளையாவது பதிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி பாதகங்களை சரியான ஆவணங்களுடன், மரணம் என்றால் உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது பிரேத பரிசோதனை முதல் இரத்த பரிசோதனை, தசை மாதிரி பிரசோதனை என பல்வேறு ஆய்வு முடிவுகளுடன் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு, மாவட்ட, மாநில, மத்திய அளவிலான கமிட்டிகள் இவற்றை அடுத்தடுத்து முறையாக பரிசீலித்து  வகைப்படுத்துவர். இது அனைத்து வகையான தடுப்பூசிக்கும் பொருத்தும். 2020 டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம்  இதுபற்றி விவரமான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.

ஆனால், இத்தகைய வழிமுறைகள் எதையும் நடிகர் விவேக்கின் மரண விவகாரத்தில் பின்பற்றாமல் அது தொடர்பாக சந்தேகங்களை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.

ஆகவே கோடிக்கணக்கான மக்களின் சந்தேகத்தை தனது குரலின் மூலம் வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களை அடக்குமுறையில் அல்லாது அறிவியல் பூர்வமாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி அரசு தீர்க்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?