தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வீட்டுக்கு அனுப்புங்கள்... உயர் நீதிமன்றத்தில் திடீர் மனு!

By Asianet TamilFirst Published Dec 14, 2019, 7:47 AM IST
Highlights

முதல்வர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1)பிரிவு கூறுகிறது. பாஜக உறுப்பினாராகவும் ஆர்எஸ்எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுநர், ஆர்எஸ்எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.
 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9 அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவையும் எடுக்காமல் அரசியல் சாசன விதிகளை மீறிச் செயல்பட்டுவருகிறார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356(1)பிரிவு கூறுகிறது. பாஜக உறுப்பினாராகவும் ஆர்எஸ்எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுநர், ஆர்எஸ்எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.
அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயல்பாடு கேலிக்குரியதாக உள்ளது. இவை அரசியல் சாசன முடக்கத்துக்கு சமமாகும். எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கண்ணதாசன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!