இனியும் பொறுக்க முடியாது... டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவோம்... திருமாவளவன் ஆவேசம்..!

Published : Apr 21, 2021, 08:51 PM ISTUpdated : Apr 21, 2021, 08:53 PM IST
இனியும் பொறுக்க முடியாது... டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவோம்... திருமாவளவன் ஆவேசம்..!

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொருக்க முடியாது. ராமதாஸ் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுப்போம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரக்கோணத்தில் சோகனூர் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் புகார் எதுவும் பெறாமல் சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே புகாராக கொண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை ஒரு சார்பாகவும் உள்நோக்கத்தோடும் செயல்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பார்கள் என்ற முகாந்திரம் இல்லை. எனவே இரட்டைக் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏற்பட்ட முரண்பாடு பதற்றம் அதன் அடிப்படையில் சாதி வெறியர்கள் பழி வாங்கும் நடவடிக்கையாக இதை செய்திருக்கிறார்கள் என்பதே நேர்மையான உண்மை அறியும் குழுவினர் முன்வைத்திருக்கும் தகவல். குறிப்பாக விசிக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடவடிக்கை ஒரு காரணமாகும். இதை மூடி மறைக்க சிலர் திசை திருப்புகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதுமே சாதியின் பெயரால் வன்கொடுமை, ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கின்றன. இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும். தயானந்த கிராமத்தைச் சேர்ந்த தேவனந்தன் - சரஸ்வதி என்ற இளம்பெண் காதலின் பெயரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்தக் கொலையையும் சொந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் இழப்பையும் தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார் ராமதாஸ். அருவருப்பான அநாகரிகமான அரசியலை ராமதாஸ் கையில் எடுக்கிறார்.
சரஸ்வதியின் கொலைக்கு காரணமாக காதல் இருக்கலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து மறைமுகமாக தொடர்ந்து தாக்குவதும் அவதூறு பரப்பும் சமூக வலைதளங்களில் அதற்கான பிரசார களமாக பயன்படுத்துவது நீடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும்? அவர் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்றும் தற்குறித்தனத்தோடு அவதூறுகளைப் பரப்புகிறார்.
விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொருக்க முடியாது. இதை சட்டப்படி எதிர்கொள்வோம். அவர் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்க உரிய ஏற்பாடுகளை செய்வோம்” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி