அனைத்து கட்சி கூட்டத்திற்கு அடுத்த முறையாவது எங்கள கூப்பிடுங்க.. வருத்தத்தில் ஜி.கே வாசன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 12:11 PM IST
Highlights

மேகதாது தொடர்பாக தமிழக அரசு  நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என்ற அவர், வரும் காலங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அனைத்து கட்சிகளையும் அழைக்க  வேண்டும், விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு விவசாய பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்றார்

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அனைத்து கட்சிகளையும் அழைக்க  வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் 
ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

காமராஜர் பிறந்த நாளை நகரம் முதல் கிராமம் வரை கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நாளாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி மத்திய மாநில அரசுகளின் வழிமுறைகளை கடைபிடித்து மூன்றாவது அலையை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகிறோம் என்றார். பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தாமதமில்லாமல் தடுப்பூசி போடுவதற்காக வழிகளை ஏற்படுத்த வேண்டும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், இது தமிழகத்தின் ஒட்டுமொத்த  விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை என்றார்.

மேகதாது தொடர்பாக தமிழக அரசு  நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என்ற அவர், வரும் காலங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அனைத்து கட்சிகளையும் அழைக்க  வேண்டும், விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு விவசாய பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்றார். கொங்கு நாடு குறித்த கேள்விக்கு வளமான தமிழ்நாடு வலிமையான இந்தியா என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
 

click me!