இடைத் தேர்தல் தேதி அதிரடி மாற்றம் ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 27, 2019, 9:39 PM IST
Highlights

கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, இரு கட்சிகளையும் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆனால் அவர்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன், தற்போதைய சட்டசபையின் பதவி காலம் முடியும் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவித்தார்.இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அங்கு எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது.

இதற்கிடையே, சபா நாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த நிலையில், 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியாக உள்ள 17 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 21-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தொடர்ந்தனர். அதில் , தங்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையேல் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த மனுவை கடந்த 23-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் சித்த ராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில்,  ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15 தொகுதிகளுக்கும்  டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.  

click me!