167 நாட்கள் கழித்து இன்று முதல் வெளியூர் பேருந்து சேவை... சென்னை மெட்ரோ ரயில்களும் ஓடத்தொடங்கின..!

By Asianet TamilFirst Published Sep 7, 2020, 8:11 AM IST
Highlights

தமிழகத்தில் 5 மாதங்கள் (167 நாட்கள்) கழித்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் தொடங்கின.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் மாதம் 24-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 5 மாதங்கள் கழித்து பேருந்து சேவைகளைத் தொடங்க தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி 5 மாதங்கள் கழித்து செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் உள்ளூர் பேருந்துகள் சேவைகள் தொடங்கப்பட்டன.  இந்நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் வெளியூர் பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன.
வெளியூர் பேருந்துகளில் பயணிப்போர் பேருந்தில் ஏறும்போது இறங்கும்போதும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும், பேருந்தில் தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், பேருந்துகள் முகக்கசவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை பேருந்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல 5 மாதங்கள் கழித்து பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துனர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேபோல சென்னையிலும் 6 மாதங்கள் கழித்து (167 நாட்கள்) மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் சேவை நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வழித்தடங்களில் ரயில் நிற்கும் நேரத்தை மெட்ரோ நிர்வாகம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே 100 சதவீத பயணிகளும் பேருந்து சேவை, சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே ஆம்னி பேருந்து சேவையைத் தொடங்குவோம் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 

click me!