பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம்... வாகனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 26, 2021, 11:17 AM IST
Highlights

செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு  செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு  செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒகேனக்கல்லில் 2016ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், ரூ.14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு  செய்வதை கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என கூறி தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுனர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்றும், அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேசமயம் புதிய வாகனத்தை வாங்கும் போது அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையான தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களை குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 

click me!