அடுத்து தென் மாவட்ட திமுக எம்.எல்.ஏ... திமுகவிலிருந்து செங்கற்களை உருவ பாஜக திட்டம்... குஷியில் பாஜகவினர்!!

By Asianet TamilFirst Published Aug 6, 2020, 8:32 AM IST
Highlights

கு.க. செல்வத்தைத் தொடர்ந்து தென்மாவட்ட கோயில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வை பாஜகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை  நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். இதனையடுத்து திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர் வகித்து  வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான  கமலாலயத்தில் நடந்த ராமர் வழிபடும் நிகழ்ச்சிக்கு கு.க.செல்வம் சென்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், “பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை.” என்று பேசிவிட்டு சென்றார்.


கு.க. செல்வம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல், அதிருப்தி எம்.எல்.ஏ.வாக பாஜக சார்பாக தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுக்கும் வகையில் பாஜக திட்டமிட்டுவருகிறது. இந்நிலையில் கு.க. செல்வத்தைத் தொடர்ந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பாஜகவில் ஐக்கியமாகப் போவதாக பாஜகவினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தொடர்ச்சியாக மு.க. ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் அவரிடம் பேச்சுவார்த்தைத் தொடங்கிவிட்டதாகவும் பாஜகவினர் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும் பாஜகவினர் குறிப்பிட்டு தகவல்களைப் பரப்ப தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்து திமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்களை உருவும் வேலையை பாஜக தொடங்கியிருப்பதால், அக்கட்சி தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.


இந்தத் தகவல் சமூக ஊடங்களிலும் பரப்பப்படுவதால், திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவரும் மாற்று முகாம் செல்ல மாட்டார்கள் என்று நம்பிய மு.க. ஸ்டாலின் எண்ணத்தில் கு.க. செல்வம் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார். இதனால், தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது திமுக மேலிடம்.

click me!