நேரு குடும்பத்தை காலி செய்ய பாஜக பக்கா பிளான்... விடமாட்டோம் என காங். தலைவர் சூளுரை!

By Asianet TamilFirst Published Jun 24, 2019, 11:02 AM IST
Highlights

 காங்கிரஸில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ராகுல் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளார். புதிய தலைவர் குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ராகுல் காந்தி  தலைவராக நீடிப்பதையே காங்கிரஸில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். ராகுல் வழங்கிய காலஅவகாசம் முடியும்வரை எல்லோருமே காத்திருக்க வேண்டும். 

‘நேரு குடும்பம் அல்லாத காங்கிரஸ்’ கட்சியை உருவாக்கி, அதன்மூலம், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்பதை அடைவதுதான் பாஜகவின் நோக்கம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், கட்சி தலைவர் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல் காந்தி. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால், தலைவர் பதவிலியிலிருந்து விலகும் முடிவில் அவர் உறுதியாக உள்ளார். இதற்கிடையே புதிய தலைவராக ராஜஸ்தான் முதல்வரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.


 இந்நிலையில் புதிய தலைவர் குறித்தும் தேர்தல் தோல்வி குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ காங்கிரஸில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ராகுல் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளார். புதிய தலைவர் குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ராகுல் காந்தி  தலைவராக நீடிப்பதையே காங்கிரஸில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். ராகுல் வழங்கிய காலஅவகாசம் முடியும்வரை எல்லோருமே காத்திருக்க வேண்டும். அதற்குள் வெளியாவது எல்லாமே ஊகங்கள்தான்.
நேரு குடும்பத்தைச் சாராதவர்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம்தான். ஆனால், அதே நேரம் நேரு குடும்ப உறுப்பினர்களின் பங்கெடுப்பு கட்சியில் தீவிரமாகவும் இருக்க வேண்டும். கடுமையான கருத்து வேறுபாடுகள் எழும்போது அதை தீர்க்க அவர்கள் உதவி செய்தால், நேரு குடும்பத்தினர் தலைமை பொறுப்பில் இல்லாமலேயே நிலைத்திருக்க முடியும் என  நம்புகிறேன். இதற்கு முன்பு யு.என்.தேபாரில் தொடங்கி பிரமானந்த ரெட்டிவரை நேரு குடும்பத்தினர் அல்லாதவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர். அதேபோல இப்போதும் பின்பற்றலாம்.


 ‘நேரு குடும்பம் அல்லாத காங்கிரஸ்’ கட்சியை உருவாக்கி, அதன்மூலம், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்பதை அடைவதுதான் பாஜகவின் நோக்கம். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி கணக்கில் தவறு செய்துவிட்டது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்தான் இந்தக் கணக்கு நன்றாக வேலை செய்தது. இந்த விஷயத்தில் காங்கிரசைவிட திமுக நல்லதொரு முன்முயற்சிகளை எடுத்தது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட அடையாளங்களை இழக்காமல், ஒரே குடும்பமாக நீடிக்கலாம் என்று எடுத்துச் சொல்லி சேர்க்க வேண்டும். இதேபோல ஒத்த கருத்தொற்றுமை கொண்ட கட்சிகளை ஓரணியில் திரட்டி, தேர்தல் காலத்தில் கூட்டணியாக மாற்றுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். பாஜகவின் சவாலை சமாளிக்க அதுதான் சிறந்த வழி.” என்று மணிசங்கர் தெரிவித்துள்ளார்.

click me!