ஒரே நேரத்தில் எம்.பி.யாகவும் விமானியாகவும் பணியாற்றும் பாஜக தலைவர்.. ஆச்சரியத்தில் மூழ்கிப்போன தயாநிதி மாறன்!

Published : Jul 14, 2021, 09:16 AM ISTUpdated : Jul 14, 2021, 09:17 AM IST
ஒரே நேரத்தில் எம்.பி.யாகவும் விமானியாகவும் பணியாற்றும் பாஜக தலைவர்..  ஆச்சரியத்தில் மூழ்கிப்போன தயாநிதி மாறன்!

சுருக்கம்

 நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்துகொண்டே விமானியாகவும் பணியாற்றும் ராஜிவ் பிரதாப் ரூடியைப் பற்றி திமுக எம்.பி. தயாநிதி மாறன் வியப்பு தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக தயாநிதி மாறன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (13-7-21) நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது "நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?" என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முககவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாக தெரிந்தது.

 
நானும்  தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முககவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது. “ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை" என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது,  அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணியாற்றியபோது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான ராஜீவ் பிரதாப் ரூடி என! 
இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் "நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றேன்.  அதற்கு ரூடி சிரித்தபடி "ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி" என்றார். எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு  விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன்.
உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா! நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தமைக்கு நன்றிகள் கோடி விமானி ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி. அவர்களே!!!” என்று பதிவிட்டுள்ளார். ராஜீவ் பிரதாப் ரூடி பீகார் மாநிலம் சரன் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!