
பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன், பாமக சார்பில் ஜி.கே. மணி, பாஜக வார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் பங்கேற்ற வானதி ஸ்ரீனிவாசன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில், பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும்போது பாஜக மட்டும் நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.