நடிகர் ரஜினியின் அரசியல் வருகையால் பாஜகவை பொறுத்தவரை எந்த மாற்றமும் ஏற்படாது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்தார்.
பல்வேறு கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இன்று இணைந்தனர். சென்னை தலைமையகமான கமலாலயத்தில் நடந்த இணைப்பு விழாவுக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடிகர் ரஜினியின் அரசியல் வருகையால் பாஜகவை பொறுத்தவரை எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனென்றால் பாஜக ஒரு தேசிய கட்சி. ஒரு தனிநபர் வருகையால் 18 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு தேசிய கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதேவேளையில் ரஜினியின் வருகையை பாஜக வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.
ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கரு. நாகராஜன், “ரஜினி அரசியலுக்கு வந்தால், பாஜகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிதான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு புயல் உருவாகிறது. அந்த புயல் உருவாகும்போது எங்கே இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தப் புயல் கரையைக் கடக்கும்போதுதான் புயல் யார் பக்கம் என்பது தெரிய வரும்” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக தலைமையில் முதல்வராக ஒருவர் வர வேண்டும் என்றால், அது மக்கள் கையில்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.