
ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக தீவிரம்
இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. ஆளுநர் வாகன மீதான தாக்குதல் குறித்து அண்ணாமலை கருத்து தெரிவிக்கையில், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதுதொடர்பான வீடியோவையும் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்துவிட்டு முதல்வர் பார்க்கட்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் குறித்து ஏற்கனவே உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
அமித் ஷாவுடன் சந்திப்பு
இந்நிலையில் அமித் ஷாவை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து முறையிட இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 24 அன்று உள் துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அன்று அவரைச் சந்திக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 24-ம் தேதி புதுச்சேரி வர உள்ளார். அப்போது, ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதல் குறித்து அவரிடம் நேரில் முறையிட உள்ளோம். என்னுடைய கடிதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது கண்துடைப்பு ஆகும். இந்த விஷயத்தில் முதல்வர் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.