முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை.. அமைச்சரின் சொத்துக்களை முடக்கி அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 17, 2022, 10:57 AM IST
Highlights

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவர், 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்பத்தினர் 6 பேருக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக  லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அந்த வழக்கு இரண்டு வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் அதுவரை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிய நிலையில் சுமார் 160 ஏக்கர் நிலம் உள்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!