
திமுக அரசுக்கு தைரியமிருந்தால், திராணியிருந்தால் அண்ணாமலையை கைது செய்து பாருங்கள் என்று நாராயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். சின்ன பையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறேன். பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைத்திருக்கிறோம். கூட இருந்தே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள்" : ஆர் எஸ் பாரதி.
உங்கள் ஜாதகம் மோசமான ஜாதகம் தான் ஆர்.எஸ். பாரதி அவர்களே. தள்ளாத வயதில் விரைவில் சிறைக்கு செல்ல தயாராகுங்கள். அண்ணாமலை சின்னப்பையன் அல்ல சிங்கத்தலைவன். திமுக என்ற குள்ள நரியை ஓட ஓட விரட்ட வந்த சிங்கம். அதனால் தான் திமுகவினர் கொலை மிரட்டல்கள் விடுக்கின்றனர். பிராமணர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து அந்த சமுதாயத்தை தாக்கும் திமுக கோழைகளே, தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் அண்ணாமலையின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து பாருங்கள்.
போனால் போகிறது என்று உங்களை பாஜக தான் விட்டு வைத்திருக்கிறது. ஒரு சாதியை இழிவுபடுத்தும் கேடுகெட்ட அரசியலை கைவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.