பாவலரின் சகோதரர்கள் பரிவார்களின் பலி ஆடுகளா.? இளையராஜா, கங்கை அமரனை போட்டுத்தாக்கிய திருமாவளவன்!

By Asianet TamilFirst Published May 4, 2022, 10:45 PM IST
Highlights

அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

’அம்பேத்கரும் மோடியும்’ என்ற நூலில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் இளையராஜா சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், “இளையராஜா எழுதிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டார்” என்று இளையராஜா சொன்னதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் நீரு பூத்த நெருப்பாக இருந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு கங்கை அமரன் அன்மையில் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், கங்கை அமரன் நெறியாளரை ஒருமையில் திட்டியும் பேசியும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதாக சர்ச்சையானது.

மேலும் அந்தப் பேட்டியில் விசிக  தலைவர் தொல். திருமாவளவனை அம்பேத்கருடன் ஒப்பிட்டு விசிக நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக கங்கை அமரன் திரும்ப திரும்ப எதிர்க் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இதற்கு திருமாவளவன் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக சமூக ஊடகப் பக்கங்களில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.  

அதில், “ஒப்பீடு செய்வதில் 
இருவகை உண்டு.
1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு
கரும்பு இனிக்கும் ;
கனிகள் இனிக்கும் -
இது நேர்மறை
கரும்பு இனிக்கும் ;
வேம்பு கசக்கும் -
இது எதிர்மறை
அம்பேத்கர் ; பெரியார் -
இது நேர்மறை. 
அம்பேத்கர் ; மோடி- 
இது எதிர்மறை. 
அம்பேத்கரும் மோடியும் எதிர் எதிர் துருவங்கள்.

எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல். பாவலரின் ‘சகோ'க்கள்  பரிவார்களின் பலிஆடுகளா?” என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!