கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரம்... விளக்கம் கொடுக்கும் அண்ணாமலை!!

By Narendran SFirst Published Mar 14, 2022, 5:27 PM IST
Highlights

குருவிற்கு யாராக இருந்தாலும் மரியாதை செலுத்திதான் ஆக வேண்டும் என்று கே.என்.நேரு தரையில் அமைர்ந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். 

குருவிற்கு யாராக இருந்தாலும் மரியாதை செலுத்திதான் ஆக வேண்டும் என்று கே.என்.நேரு தரையில் அமைர்ந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவரது கருத்துக்களை கேட்பது வரவேற்கக் கூடிய விஷயம். அந்த அடிப்படையில் அமைச்சர் கே .என்.நேரு தரையில் அமர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் பேசியது சரியானது. நானாக இருந்தாலும் குருவிற்கு முன்பு தரையில் அமர்ந்து தான் பேசி இருப்பேன். குருவிற்கு யாராக இருந்தாலும் மரியாதை செலுத்திதான் ஆக வேண்டும். திமுகவினர் கூறும் கருத்துக்களை அவர்கள் வீட்டில் உள்ளவர்களை கேட்கமாட்டார்கள், திமுக ஒரு தவறான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் உடன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கள்ள தொடர்பு வைத்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதயாத்திரை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது குறித்து தமிழக காங்கிரஸ் எந்தவித கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த கேள்வியும் எழுப்பாமல் உள்ளார். மாநில உரிமையை முதலமைச்சர் விட்டுத்தர தயாராகிவிட்டார். ஏற்கனவே ஹேமாவதி, கபினி அணைகள் கட்டும் போது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கப்பட்டது. இப்போது முல்லை பெரியாறு பிரச்சினையிலும் உரிமையை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டனர் என்றார். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் தமிழக அரசு ஒட்டி வருகிறது. தமிழக அரசு அறிவிப்பு அரசாக மட்டுமே உள்ளது.

அம்மா உணவகத்தின் போர்டுகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிதாக போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடத்தினார். இதில் சோசியல் மீடியாக்களில் தவறாக பரப்பினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்தினால் அவர்களை கைது செய்ய ஏன் உத்தரவிட வில்லை. மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி மதுக்கடை மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, சட்டத்தை யாராக இருந்தாலும் கையில் எடுக்கக்கூடாது. அதற்காகதான் காவல்துறையினர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

click me!