திமுக ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி... அடிச்சு தூக்கும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 13, 2021, 10:13 AM IST
Highlights

தேர்தல் வருகின்ற காரணத்தால் நாள்தோறும் அறிவிப்புகளைக் கொடுத்து, இப்போது டேட்டா கார்டு… டேட்டா கார்டு… என்னும் முதலமைச்சர் பழனிசாமிக்கு டாட்டா காட்டத் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் வருகின்ற காரணத்தால் நாள்தோறும் அறிவிப்புகளைக் கொடுத்து, இப்போது டேட்டா கார்டு… டேட்டா கார்டு… என்னும் முதலமைச்சர் பழனிசாமிக்கு டாட்டா காட்டத் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- நாளை மறுநாள் தமிழர் திருநாள் - பொங்கல் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு. அதற்கு இப்போதே நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்னென்ன பணிகளை ஆற்றி இருக்கிறது, என்னென்ன பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது, அதனால் எத்தனை மாணவர்கள் பயன் பெற்றார்கள், என்ன பலன்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதைப் பற்றி மாவட்டச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்.

இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எதற்காகத் தொடங்கப்பட்டது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் மருத்துவக் கனவு கனவாகவே போய்விட்டது என்ற ஏக்கத்தின் காரணமாக மனம் வெதும்பி அரியலூர் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்ற சகோதரி தற்கொலை செய்து கண்டு மாண்ட கொடுமை நடந்தது. அதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் அந்த நீட் தேர்வுக்கு முடிவு வரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம், அதன் நிலை என்னவென்று தெரியவில்லை; தட்டிக் கேட்கின்ற அரசு தமிழகத்தில் இல்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற போது, அந்த நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குப் பெற வேண்டுமோ, அந்த விலக்கைப் பெறுவோம் அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.

பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும், வேலைகளுக்குச் செல்ல வேண்டும்,   சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது என்ற நோக்கத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியதைப் பின்பற்றி, இந்த அகாடமியை 2019-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் தொடங்கினோம். நம்முடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தால் மட்டும் போதாது என்று, துறைமுகம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு போன்ற தொகுதிகளிலும் துவங்கியிருக்கிறோம். இது 234 தொகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி மையம் துவங்கப்பட்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஆட்சியில் அமையாது; நம்முடைய ஆட்சியில் நிச்சயமாக அமையும்!

இப்பயிற்சியில் இது வரை 5 பேட்ச் நிறைவடைந்து 348 மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் 5 ஆம் பேட்ச் மாணவிகள் 82 பேர் பயிற்சி முடிந்து தேர்வு எழுதத் தயாராக இருக்கிறார்கள். தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இளைஞர்கள் பலரும் என்னிடம், “மாணவிகளுக்கு மட்டும் தான் பயிற்சியா? மாணவர்களுக்குக் கிடையாதா? நாங்களும் உங்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள்தானே !” என்று கேட்டார்கள். அவர்களது விருப்பத்தை ஏற்று, மாணவர்களுக்கான தனி பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்தேன்.

முதல் பேட்ச் மாணவர்கள் 80 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை நான் செலுத்தி உள்ளேன். அவர்கள் 80 பேருக்கும் மடிக்கணினியும் வழங்கி உள்ளேன். இந்த 80 பேரில் 24 பேருக்கு இதுவரை வேலை கிடைத்துள்ளது. அவர்களை வாழ்த்துகிறேன். மற்றவர்களுக்கும் விரைவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் இரண்டாம் பேட்ச் துவக்கப்பட்டுள்ளது. 75 மாணவர்கள் இதுவரை இப்பயிற்சியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அவர்களுக்காக தையற்கலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதில் 196 மகளிர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதற்கான பட்டத்தை இன்று நான் வழங்கியுள்ளேன். உங்களை வளப்படுத்திக் கொள்ள இந்த பயிற்சி மையம் பயன்படும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கப் போகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தால், முதலமைச்சர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

மக்களை ஏமாற்றி அந்தப் பொறுப்பில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் பணியாற்றுகின்ற இயக்கம்! ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம் என்றால், ஆட்சியில் இருந்தால் எவ்வளவுப் பணிகளைச் செய்வோம் என்று எண்ணிப் பாருங்கள். அதற்குச் சிறு எடுத்துக்காட்டுதான் ‘ஒன்றிணைவோம் வா!” செயல்திட்டம். அதன்மூலமாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி, அனைவருக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள் கூறி உரையை நிறைவு செய்தார்.

click me!