மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் தனியாளாய் ஆ. ராசா... சோகத்தை வரவழைக்கும் ஒற்றைப் போட்டோ.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2021, 4:07 PM IST
Highlights

தவிர்க்கமுடியாத அரசியல்வாதியாக ராசா பரிணமிக்க அவரது மனைவி பரமேஸ்வரியின் பங்கு அளப்பரியது. தற்பொது அவரது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் அவர் தனியாளாய் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆட்படும் அரசியல்வாதிகள் வாய்தா மேல் வாய்தா வாங்கி காலம் கடத்துவது வழக்கம். ஆனால் தன்மீதான குற்றத்திற்கு குற்றம்சாட்டப்பட்டவரே தனக்காக வாதாடி, தனது வாதத் திறமையால், நாவன்மையால், வழக்கின் முக்கிய ஆதாரங்களை தகர்த்து தான் குற்றமற்றவன் என நிரூபித்த ஆற்றல் மிக்க அரசியல்வாதி ஒருவர் நம்மகத்தில் உண்டென்றால், அது ராசா எனப்படும் ஆண்டி முத்து ராசாவாகத்தான் இருக்க முடியும். 

எத்தனையோ அரசியல்வாதிகள் வருகிறார்கள், போகிறார்கள் ஆனால் அவர்கள் அத்தனை பேரும் வரலாற்றில் இடம் பிடிப்பதில்லை, அத்தனை பேரும் அவ்வளவு எளிதில் நம்மை கடந்து போய் விடுவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு தாக்கத்தை நம்மில் ஏற்படுத்திவிட்டு போகின்றனர். அப்படி எளிதில் கடக்கமுடியாத, ஒவ்வொருவர் மனதிலும் " நம்பிக்கையோடு போராடு"  என்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆ. ராசா என்றால் அது மிகையல்ல. 

தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அக்காட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் என்றால் அதுவும் ஆ. ராசா மட்டும் தான். அவர் இந்த உயரத்தை அடைய சந்தித்த தடைகள், கொடுத்த விலைகள் அதிகம். ஆனால் அத்தனையையும் உறுதியுடன் எதிர்கொண்டு, தமிழக அரசியல் களத்தில் கொள்கைப் பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்ற தவிர்க்க இயலாத முக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்கிறார் ஆ.ராசா...

யார் இந்த ராசா?  என்று அவரது வாழ்க்கைப் பின்னணியை சற்று திரும்பிப் பார்த்தோமெனில், பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் மே 10, 1963 ஆம் ஆண்டு சாதாரண விவசாயக் கூலித் தொழிலாளிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார். வறுமைக்கு இடையில் பிறந்தாலும் மகனுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் என்னவோ ராசா. அவரது தந்தையின் பெயரான ஆண்டிமுத்துவுடன் சேர்த்து பின்னாளில் அவரது பெயர் ஆண்டிமுத்து ராசாவானது. இவரின் வாழ்வே சற்று வித்தியாசமானதுதான், இவர் பிறக்கும் வரை அவரது பெற்றோர்கள் செழிப்புடன் இலங்கையில் இருந்தார்கள், ஆனால் இவர் இந்தியாவில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆன்மீகத்தில் ஊறிப்போனது என்றாலும், பாடலூர் பள்ளி இவருக்கு தந்தை பெரியாரை அறிமுகம் செய்து வைத்தது. பெற்றோர்கள் விருப்பப்படி பிஎஸ்சி பட்டம் பெற்ற இவர், பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லியும் மதுரை சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார் ராசா, 

இளங்கலை மாணவராக இருந்தபோதே திராவிட கழக மாணவர் அணியின் சேர்ந்து பணியாற்றினார், பணியைப் பாராட்டி மாநிலத் துணை அமைப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டக் கல்விக்கு பின் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணி,  தனது வாதத் திறமையால் அங்கேயே தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் ராசா, பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து இலக்கிய அணியின் பணியாற்றினார், படிப்படியாக உயர்ந்து, அதன் காரணமாக 1996-ல் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதில் வென்றார். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார், பின்னர்  1999 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் வெற்றி பெற்றார் அப்போது நாடாளுமன்றத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் ராசா,

தன் அயராத உழைப்பால் திமுக தலைவர் கருணாநிதியின் மனம்கவர்ந்த கேபினட் அமைச்சராக வலம்வந்தார், பிறகு அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட பிரச்சினைக்குரிய துறையான தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராகவும் பொறுப்பேற்றார், அதுவரையில் யாருக்குமே பிடிபடாத அலைக்கற்றை வரிசையை  பொதுவெளிக்கு கொண்டுவந்தார், புதிய தொழில் முனைவோர் பங்கேற்கும் வகையில் அதன் நடைமுறைகளை மாற்றி அமைத்தார். ஆனால் சிஏஜி அறிக்கையோ, ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என குற்றம் சாட்டியது. ஆனால் அதை மறுத்த ராசா தான் செய்தது தொலைத்தொடர்பு துறையில் புரட்சி என்றார், அதுதான் தன் கட்சியின் கொள்கை எனவும் முழங்கினார், 

ஆனால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார், வழக்கு நீதிமன்றம் சென்றது, தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார் ராசா, குற்றம் சாட்டப்பட்டு, வாய்தா வாங்காமல் வழக்கு விசாரணையில் ஆஜராகிய  ஒரே அரசியல்வாதி ராசாவாகத்தான் இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவரே வழக்கறிஞராக தனக்காக வாதாடி, வழக்கின் முக்கிய ஆதாரங்களை அடித்து துவம்சம் செய்து, தான் குற்றமற்றவன் என நிரூபித்தார் ராசா, வழக்கில் வென்றது மட்டுமின்றி உலகே ஆர்வத்தோடு எதிர்நோக்கிய 2ஜி வழக்கில் தன் சட்ட அறிவால், வாதத்திறமையால் வென்றதோடு மாத்திரமல்லாமல், வழக்கின் விவரங்களையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் அவர். அவர் வழக்கை சந்தித்தபோது சொந்த கட்சிக்காரர்களாலேயே மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரின் நெருங்கிய நட்புகள் கூட அவரிடமிருந்து  ஒதுங்கின. 

இப்படி கடுமையான இக்கட்டு காலங்களில் கூட அவருக்குத் துணையாக நின்றவர் அவரது மனைவி பரமேஸ்வரி மட்டும்தான், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீராத  புற்று நோய்க்கு ஆட்பட்டு அவர் மறைந்தார். எத்தனை மனவுறுதி கொண்டவராக இருந்தாலும் கட்டிய மனைவி மரணிக்கும் போது  சுக்குநூறாக உடைந்து நொறுங்கிப் போவது இயற்கை. அப்படித்தான் ராசாவையும், மனைவியின் மரணம் பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து திமுக என்னும் மிகப் பெரிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், நம்பிக்கைக்குரிய, ஆற்றல்மிக்க நாடாளுமன்ற உறுப்பினர். தவிர்க்கமுடியாத அரசியல்வாதியாக ராசா பரிணமிக்க அவரது மனைவி பரமேஸ்வரியின் பங்கு அளப்பரியது. தற்போது அவரது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் அவர் தனியாளாய் நிற்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது, அவர் அதில் தனியாளாய் நிற்பது சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

அதாவது, மனைவி பரமேஸ்வரியின் பிரிவு ராசாவை மனதளவில் நொறுங்க வைத்திருக்கலாம், ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் கருவூலத்தில் உருவான கொள்கைவாதி ராசா போன்றோர்க்கு மரணமோ, பிரிவோ அவர்கள் கொண்டலட்சிய பயணத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்து விடாது, ராசா பயணிக்க வேண்டிய தூரம் நீண்ட நெடியது, நிச்சயம் அவர் துயரத்திலிருந்து மீண்டு லட்சியப் பாதையில் வெற்றிநடை போடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் உள்ளது. மீண்டு வாருங்கள் ராசா...
 

click me!