ஸ்டாலின் அரசுக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்.. அனுமதி கொடுத்தே ஆகனும்: அடம்பிடிகும் CPM, CPI, VCK..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2022, 1:55 PM IST
Highlights

அக்டோபர் -2ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மதநல்லிணக்க மனிதச்சங்கிலி இயக்கத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டுமென இந்திய சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 

அக்டோபர் -2ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மதநல்லிணக்க மனிதச்சங்கிலி இயக்கத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டுமென இந்திய சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், பி.எப்.ஐ. அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தியதையும், அதனைத் தொடர்ந்து  உபா சட்டத்தை பயன்படுத்தி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதையும் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ந் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியளித்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே அந்த உத்தரவை திரும்பப் பெற வற்புறுத்தியதோடு, இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ந் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதச் சங்கிலி போராட்டத்தில்  ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும்.

எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே,

தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாலை 4.00 மணியளவில் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!