அதிமுக வாக்கு வங்கி இன்னும் குறையல.. திமுகவுக்கு பயம் காட்டும் கார்த்தி சிதம்பரம்...!

Published : Mar 10, 2022, 10:35 AM IST
அதிமுக வாக்கு வங்கி இன்னும் குறையல.. திமுகவுக்கு பயம் காட்டும் கார்த்தி சிதம்பரம்...!

சுருக்கம்

அதிமுகவில் இரட்டை தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தான் தோல்வியை சந்தித்து வருவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக தமிழகத்தில் அதிக அளவு வாக்கு  சதவிகிதத்தை கொண்ட கட்சியான அதிமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் காரணமாக திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பின் நடைபெற்ற நான்கு  தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியையே பெற்றுள்ளது. எனவே அதிமுகவின் வாக்கு சதவிகிதம் இனி உயர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று திமுகவினர் எண்ணி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவினரும் தங்களது வாக்குகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதால் தான் தோல்வி ஏற்படுவதாகவும் இதன் காரணமாக அதிமுகவுடன் அமமுக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். அதிமுகவின் ஒரு பிரிவினர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில்  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும் அப்படி எழுப்பிய கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமையால் நீக்கப்படுவதால் அடுத்த சில நாட்களிலேயே  சசிகலா இணைப்பு தொடர்பான முழக்கமும் அடிபட்டு விடுகிறது.

அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி சிதம்பரம், சசிகலாவை இணைப்பது தொடர்பான பிரச்சனை அதிமுகவின் உள் விவகாரம் என தெரிவித்தார். அதிமுகவின்  வாக்கு வங்கி இப்பவும்  அப்படியே தான் இருப்பதாக தெரிவித்தவர், அதிமுகவில் தலைமை சரியான ஒருங்கிணைப்பில் இல்லாததால் தான் அதிமுகவில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் தற்போது உள்ள இரட்டை தலைமை செழிப்பாக இருக்காது எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த  9 மாதங்களாக சிறப்பாக, வெளிப்படையாக செயல்படுகின்றது என தெரிவித்தார். தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு சில இடங்களில்  வெற்றி பெறாமல் போயிருக்கலாம் என தெரிவித்தவர், அதற்காக காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

விரைவில் அதிமுக பொதுகுழு 

ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அதிமுக தாம் சந்தித்த அனைத்து தேர்தல்களில் தொடர் வெற்றியே பெற்று வந்தது. வாக்கு சதவிகிதமும் மற்ற கட்சிகளை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. இந்தநிலையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்டு வரும் தோல்விக்கு பெரும்பாலானோர் இரட்டை தலைமை மீது கைகாட்ட தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் சசிகலா  இணைப்பு, ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் வாக்குகள் இரண்டாக பிளவு பட்டது திமுகவிற்கு சாதகமாக மாறி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP Plan: அண்ணாமலைக்கு ‘ரெஸ்ட்’ அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ - டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்!
விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!