ஓ.பி.எஸால் வந்த பெரும் சிக்கலில் இருந்து தப்பிய எடப்பாடி... அதிமுக ஆட்சியை இனி அசைக்க முடியாது..!

By Thiraviaraj RMFirst Published Jul 3, 2019, 12:29 PM IST
Highlights

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. 
 

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. 

 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பு வகித்தார். உட்கட்சி விவகாரம் காரணமாக அந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டது. தன்னை வற்புறுத்தி தான் பதவியில் இருந்து விலக வைத்தார்கள் என்று ஜெயலலிதா சமாதி முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் ஓ.பன்னீர் செல்வம். கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவு தந்தனர்.

பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.  ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவர் உட்பட மஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம், மனோகரன் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். கொறடாவை மீறி இவர்கள் வாக்களித்தனர்.

சில நாட்கள் கழித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் முதல்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதே போன்று இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவில் தலையிட இயலாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக சார்பிலும், தங்கதமிழ்செல்வன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை இன்று நடத்தியது. நீதிபதிகள் ஏ.எஸ். பாப்டே மற்றும் பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இதனால், அதிமுக அரசு பெரும் சிக்கலில் இருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளது.

click me!