ஆடிப்போய்க் கிடக்கும் அதிமுக... 14ம் தேதி பாஜகவில் இணையும் முக்கிய நிர்வாகிகள்... இரட்டை இலையை பிளக்கும் பாஜக!

By Asianet TamilFirst Published Jan 5, 2021, 4:05 PM IST
Highlights

​தமிழகத்திற்கு வரும் அமித்ஷா இந்த முறை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரியங்களை செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக அமித் ஷாவின் வருகை அதிமுகவை பதம் பார்க்கும் எனக் கூறப்படுகிறது. 
 

​தமிழகத்திற்கு வரும் அமித்ஷா இந்த முறை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரியங்களை செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக அமித் ஷாவின் வருகை அதிமுகவை பதம் பார்க்கும் எனக் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை பயணித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் கட்சி முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் துவங்கி மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரே மனதாக எடப்பாடியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்பது தான். அதே சமயம் கட்சியில் தனக்கு என்று ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என கணிசமான நிர்வாகிகள் ஓபிஎஸ் எடுக்கும் முடிவை ஏற்க தயாராக உள்ளனர். இது தவிர ஓபிஎஸ் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகளும் அவரை பின்பற்றி வருகின்றனர்.

அதிமுகவில் ஓபிஎஸூக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றாலும் அவரது அதிருப்தி கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எடப்பாடிக்கு தெரியும். எனவே தான் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஒட்டு மொத்த அதிமுகவும் எடப்பாடிக்கு பின்னால் இருந்த போதும் ஓபிஎஸ்சை சம்மதிக்க வைக்க பெரும் பிரயத்தனம் நடந்தது. ஒரு வழியாக ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொண்டாலும் அதனை அவர் முழு மனதாக ஏற்கவில்லை என்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலை தனது அரசியல் எதிர்காலத்திற்கான மிக முக்கிய அடித்தளமாக ஓபிஎஸ் கருதுகிறார்.

இந்த தேர்தலில் அதிமுக மறுபடியும் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி விட்டால் அக்கட்சி முழு அளவில் எடப்பாடி வசம் செல்ல வாய்ப்புள்ளது. அதிமுக தோல்வியை தழுவினால் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க ஓபிஎஸ்க்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதனை எல்லாம் மனதில் வைத்து தான் ஓபிஎஸ் தேர்தல் கணக்கு போட்டு வருகிறார். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் மூலமாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் சில திட்டங்களை தீட்டியிருந்ததாகவும் ரஜினி தற்போது பின்வாங்கிவிட்டதால் ஓபிஎஸ் வேறு சில வாய்ப்புகளை யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

அதே போல் சட்டமன்ற தேர்தலில் திமுகவை தனியாக எதிர்க்க அதிமுகவிற்கு பலம் இருந்தாலும் தேர்தல் பணிகள் பிரச்சனையின்றி நடைபெற மத்தியில் ஆளும் பாஜக அரசின் தயவு தேவை என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதனால் தான், கூட்டணி விவகாரத்தில் பாஜக பிடிகொடுக்காமல் இருந்தாலும் எடப்பாடி அவர்களை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். பாஜக மேலிடத்துடன் எடப்பாடியை காட்டிலும் ஓபிஎஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போதைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் பாஜகவின் நலன்களை திரைமறைவில் கவனிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் எடப்பாடியை விட ஓபிஎஸ்சையே நம்புகிறார்கள்.

இந்த வகையில் பாஜக மேலிடத்துடன் பேச ஓபிஎஸ்சை சம்மதிக்க வைக்கவே ஒரே காரில் அவருடன் எடப்பாடி பயணித்ததாக கூறுகிறார்கள். இந்நிலையில் தற்போது தன்னை கைவிட்டு விடவேண்டாம் என ஓ.பி.எஸிடம் எடப்பாடி கேட்டுக் கொள்ளவே இந்த தனிச்சந்திப்பு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். காரணம், அமித் ஷா வரும் 14ம் தேதி துக்ளக் விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகிறார். ஒருநாள் சென்னையில் தங்கி இருந்து 15ம் தேதி திரும்புகிறார். அந்த சமயத்தில் ஓ.பி.எஸின் முக்கிய ஆதரவாளர்கள் பெருமளவில் பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளனர். 

அப்படி இணைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். அப்போது ஓ.பி.எஸ் தனது செல்வாக்கை நிரூபித்து பாஜக சொல்லும் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்கிறார்கள். இதற்கு பிரதிபலனாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவும் மோடியும், அமித் ஷாவும் முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதனை முன்பே எடப்பாடியார் அறிந்து கொண்டதால் ஓ.பி.எஸை சமாதானப்படுத்தும் வகையில் ஒரே காரில் பயணித்ததாக தகவல்கள் கசிகின்றன. ஆக மொத்தத்தில் அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளம்பும் என்கிறார்கள். 

click me!