ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி.. விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2023, 8:08 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க;- சுயபுத்தி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி… ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சாடல்!!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஜி.கே.வாசன்;- தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது.  கூட்டணி கட்சி எடுக்கும் முடிவுக்கு தமாகா உறுதுணையாக இருக்கும் என ஜி.கே.வாசன் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார்கள். ஈரோடு கிழக்கு சடமன்றத் தொகுதியில் அனைத்துதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை காலை, அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். 

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! முடங்குகிறது இரட்டை இலை.! அதிர்ச்சியில் இபிஎஸ்.! குஷியில் ஓபிஎஸ்

மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

click me!