அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்.. எடப்பாடியாருக்கு அல்வா கொடுத்த அமைச்சர்கள்..! பரபரப்பு பின்னணி..!

By Selva KathirFirst Published Aug 13, 2020, 12:27 PM IST
Highlights

பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருமே தன்னை முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்மொழிவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருமே தன்னை முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்மொழிவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவில் குஸ்தி ஆரம்பமாகியுள்ளது. தமிழக அரசியலை பொறுத்தவரை யார் அடுத்த முதலமைச்சர் என்பது தான் வாக்காளர்கள் மனதில் வாக்களிப்பதற்கு முன்பாக தோன்றும் எண்ணமாக இருக்கும். கட்சியின் சின்னம், முதலமைச்சர் யார் என்பதற்கு பிறகு தான் எந்த கட்சி, அவர்களின் கொள்கை என்ன என்பதெல்லாம் வாக்காளர்களுக்கு பொருட்டாக இருக்கும். காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என ஆளுமைகளை மையமாக வைத்தே தமிழக அரசியல் இதுநாள் வரை இயங்கி வந்துள்ளது.

காமராஜரா? அண்ணாவா? எம்ஜிஆரா? கருணாநிதியா? ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்றே சட்டமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இதுவரை களம் கண்டுள்ளன. கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி களம் இறங்கிய போதும் கூட விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். எனவே தமிழக அரசியலில் அதுவும் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை ஒரு கட்சிக்கு முதலமைச்சர் வேட்பாளர் என்பது மிக முக்கியம். முதலமைச்சர் வேட்பாளர் இல்லாமல் களம் இறங்குவது என்பது முகம் இல்லாமல் ஒரு கட்சி தேர்தலை சந்திப்பது போன்றதாகும்.

திமுகவை பொறுத்தவரை மிகவும் தெளிவாக மு.க.ஸ்டாலினை முன்னிறுத்த அவர்கள் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே திமுகவின் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவில் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னிலைப்படுத்த அத்தனை பணிகளையும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக மக்களிடம் கொண்டு சேர்க்க தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் தலைமையில் ஒரு டீமை எடப்பாடி ஏற்கனவே களம் இறக்கியுள்ளார்.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை இரண்டு பேர் அதிகாரம் பொருந்தியவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஒருவர் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. மற்றொருவர் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ். இருவரும் அதிமுகவில் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். ஓ.பிஎஸ் ஏற்கனவே முதலமைச்சர் பதவியில் இருந்தவர். அவருக்கு எப்போதுமே முதலமைச்சர் பதவி மீது ஒரு கண் உண்டு.

இரண்டாக இருந்த அதிமுக மீண்டும் ஒன்றாக சேர்ந்த போதே கூடிய விரைவில் முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும்எ ன்கிற வாக்குறுதியை நம்பியே அவர் தனது அணியை அதிமுகவுடன் இணைத்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு ஓபிஎஸ்க்கு கிடைக்கவே இல்லை. எனவே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் காய் நகர்த்துவது இயல்பான ஒன்று. ஆனால் அதற்கு முன்னதாகவே தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டால் ஓபிஎஸ்க்கு வாய்ப்பே  இல்லாமல் போய்விடும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு.

ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும்விதமாக தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏக்கள் கூடி தான் முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலமாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பிரகடனம் செய்தது. ராஜேந்திர பாலாஜியை தொடர்ந்து  அமைச்சர்கள் பலரும் தனக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து இருந்தார். ஏனென்றால் அமைச்சர்கள் அனைவரையும் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு அனுசரித்து சென்று கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் அளவிற்கு அதிகமாக புகழும் அமைச்சர்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்ற வந்தால் மட்டும் அவரை முன்னிலைப்படுத்த தயங்குகின்றனர். எதனையும் வெளிப்படையாக பேசக்கூடிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூட முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பம்முகிறார். அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்ட போது அவர் வகித்த பொறுப்பை அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைத்தார் எடப்பாடி.

மேலும் விருதுநகர், மதுரை மாவட்டத்தை கடந்து சிவகங்கை மாவட்ட அரசியல் வரை உதயகுமார் செல்வாக்கு செலுத்த முதலமைச்சர் அனுசரணையாக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த தயக்கம் காட்டுகிறார். இதே போல் அமைச்சர் ஜெயக்குமாரும் கூட முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும் என்கிறார். இதன் பின்னணி கட்சி முழு அளவில் எடப்பாடி பழனிசாமி வசம் இல்லை என்பதையே காட்டுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் ஓபிஎஸ் ஆதிக்கம் இருந்தது.

எனவே தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ்சை பகைத்துக் கொள்ள வேண்டாம், கட்சியில் தேவையில்லாமல் ஒரு சலசலப்பை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர்கள் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அமைதி காப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் முதலமைச்சராக எடப்பாடியை முன்னிறுத்தினால் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியுமா? என்று கூட சில அமைச்சர்கள் யோசிப்பதாகவும் அதன் வெளிப்பாடு தான் அவர்கள் யாரும் எடப்பாடிக்கு ஆதரவாக பேசாதது என்கிறார்கள்.

click me!