
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவில் இருந்து 2 நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணபை்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
M.V. ஆசைத்தம்பி (கழக மாணவர் அணி துணைச் செயலாளர், தேவகோட்டை நகரம், சிவகங்கை மாவட்டம்)
K.C.பிரபாத்வர்மன் (விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் )
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.